இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“நமக்குள்ள கடமைகளைச் செய்தால் நாம் மட்டும் தானே, மாமா, முன்னேற முடியும்? அது எப்படி நாட்டு முன்னேற்றமாகும்.”
ரகுவின் கேள்வி மாமாவுக்கு மேலும் உற்சாகம் தந்தது. ஆர்வத்தோடு அவர் பதில் சொல்லலானார்.
“ரகு! நாமெல்லாம் சேர்ந்ததுதானே, நாடு. நாம ஒவ்வொருவருடைய முன்னேற்றமும் ஒன்று சேரும்போது, அது நாட்டு முன்னேற்றமாகி விடுகிறது.”
"அப்போ, நாம கடமை தவறினா அது நமக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே தீங்காயிடும், இல்லே, மாமா?”
தான் தெளிவாகப் புரிந்து கொண்டதைச் சரிபார்த்தாள் கோமதி.
“சரியாகச் சொன்னாய், கோமதி. உங்களைப் போன்ற படிக்கிற மாணவர்க்கென்று பல கடமைகள் இருக்கு. அதுபோல பெரியவர்களுக்கென்று பல கடமைகள் உண்டு. அவரவர் செய்யும் தொழிலைப் பொருத்து கடமையின் தன்மை வேறுபடும்.