பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் 215

கோவலன் கதாநாயகன் அல்லன்; அவன் கண்ணகியின் கணவன். அவன் கொலை செய்யப்படுவது காவியத்தின் மையச் செய்தியாகிறது. இந்தக் காவியத்தில் அவன் அரிய செயல்கள் எதுவுமே ஆற்றவில்லை. காவியத்தலைவர்கள் ஆற்றும் போர்கள் வீர வசனம் இவற்றில் எதுவுமே அவனுக்கு அமையவில்லை.

செல்வ மகன் அவன் சீரழிவு அதுதான் கதையின் கருவாகிறது. அவனைப் பற்றிய அறிமுகம் அவன் புகழ்மிக்கவன் என்பது; புகழ் உடையவன் என்று கூறுவது அவன் செல்வ நிலையை ஒட்டிக் கூறப்படுகிறது. அழகன் என்பது அவன் மாதவி விரும்புவதற்குக் காரணம் என்பதாக வெளிப்படுகிறது. பேரழகன் என்றும் கூற முடியாது. பெண் கள் இவனைப் புகழ்ந்திருக்கின்றனர். இவன் அழகில் மாதவி மயங்கிக் காதலித்தாள் என்று எங்கும் கூறப்படவில்லை. அதேபோலக் கண்ணகியும் இவனைக் கண்டு காதலித்தாள் என்று தெரிவிக்கப்படவில்லை.

'காதலன்' என்ற சொல் இவனைப் பல இடங்களில் குறிக்கின்றது. மாதவிக்கு இவன் காதலன், கண்ணகிக்கு இவன் கணவன்; இது உறவுமுறை என்று கூறலாம்.

இவன் புகழ் வெளிப்படுவதற்குக் காவியத்தில் நேரிடை எந்த நிகழ்ச்சியும் இடம் பெறவில்லை. புகழ் என்பது வீரம் அல்லது கொடை இந்த அடிப்படையில்தான் அமைவது; 'ஈதல் இசைபட வாழ்தல்' என்பர் வள்ளுவர்.

இவன் கொடைத் திறம் மாடலனால் விரித்து உரைக்கப் படுகிறது. மணிமேகலைக்குப் பெயரிட்ட நாளில் அந்தணன் தானம் பெற வருகிறான். அவனை யானை ஒன்று தூக்கிச் செல்கிறது. அதனோடு மோதி அவனை மீட்கிறான். 'கருணை மறவன்' என்று பாராட்டப்படுகிறான். அவனுக்கு வேண்டிய தானமும் தருகின்றான். யானையிடமிருந்து மீட்டது வீரம் என்று கூறமுடியாது; மறச் செயல் என்றுதான் கூறப்படும்.