பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் ஒருங்கு நின்றாற்போல் காட்சி தருகின்றீர்! இன்றுபோல் என்றும் நிலைத் திடுக நுமது நட்பு! வென்று வென்று போர்க்களத்தில் மேம்படுக உமது வேல்! புலி, கயல் பொறித்து உம் வெற்றியைப் பிற நாட்டுக் குன்றுகளில் செதுக்கிடுவீராக!” புறம் ஐம்பத்தெட்டாவது பாடலில் இந்த அழகிய கருத்தினைத் தந்து காரிக் கண்ணனார், சோழன் கரிகாலனையும், பாண்டியன் பெருவழுதியையும் ஒரு சேர வாழ்த்துகிறார். இதனைக்கொண்டு கரிகாலன் காலத்துப் பாண்டியன் பெருவழுதியென்று முடிவு கட்டுகிறோம். கரிகாலன் காலமோ கி. மு. 60 முதல் கி. மு. 10 வரையில். அந்தக் காலத்திலேதான் ரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்திருக்கிறான். அதாவது கி. மு. 39 முதல் கி. பி. 14 வரையில்! இந்தக் காலக் கணக்கை ஆராய்வதிலிருந்து அகஸ்டஸ் சீசருடன் நட்புறவு கொண்டு தூதுவரை அனுப்பிவைத்த பாண்டியன், பெருவழுதியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியவர்களாகிறோம். ரோமாபுரிக்கும், தென்னகத்திற்கும் இந்தக் காலத்திற்கு முன்பே வாணிபத் தொடர்புகள் ஏற்பட்டு இரு நாட்டுக்காரர்களும் அளவளாவி மகிழ்ந்தனர். கரிகாலனும், பெருவழுதிப் பாண்டியனும் மகுடம் புனைந்த பிறகு ரோமாபுரித் தொடர்பு வேகமாகத் தழைத்து வளரலாயிற்று. அகஸ்டஸ் சீசர் காலத்தில் ஓங்கி எழுந்த அந்த உறவு பல ஆண்டு காலம் நீடித்தது. நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தான் அந்த உறவு சிறிது சிறிதாகத் தேய்ந்து மாய்ந்தது என்று கூறலாம். தமிழகமும் ரோமும் கொண்டிருந்த தொடர்புகளுக்குச் சான்று பகரும் வகையில் புதை பொருள் ஆராய்ச்சிகள் துணை நிற்கின்றன! கிரேக்கரையும் ரோமானியரையும் யவனர்கள் என்ற பெயரால் அழைத்து, அந்த யவனர்களைத் தங்கள் அரண்மனைகளில் காவல் வீரர்களாக வைத்திருந்தனர் தமிழ் மன்னர்கள் என்பதற்கு இலக்கியங்கள் சாட்சி கூறுகின்றன. "கடிமதில் வாயிற் காவலிற் சிறந்த - அடல்வாள் யவனர்" என்ற சிலப்பதிகாரப் பாட்டு தக்க எடுத்துக் காட்டாகும். நக்கீரனார் பாடிய ஐம்பத்தாறாவது புறப் பாட்டில் "யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்" எனக் காணும் வரி, யவனர்கள் தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்றுவந்தனர் என்பதை உணர்த்துவதாகும். தென்னகத்திலிருத்து ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உணவுப் பொருள் களில் மிக முக்கியமானது மிளகு! அலாரிக் என்பவன் ஒரு காலத்தில் ரோமை வெற்றி கண்டபோது இழப்பு ஈட்டுத் தொகையில் மூவாயிரம் "பவுண்டு" தமிழ்நாட்டு மிளகும் தரவேண்டுமென்று உடன்படிக்கை செய்து கொண்டானாம். முசிறிக்குத் தெற்காக இருக்கும் குளச்சல் என்னுமிடத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூழ்கி எடுத்த முத்துக்களும் ரோமுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. டாலமி என்பவன், ரோமுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ்நாட்டுத் துறைமுகங் களில் ஒன்றாக “காபெரிஸ்" துறைமுகம் என்ற ஒரு பெயரையும் எழுதிக் காட்டுகிறான். காவிரிப்பூம்பட்டினத்தையே அவ்வாறு அழைத்திருக்கக் கூடுமெனக் கூறுவர் அறிஞர். அவன் "புடோக்கி” என்று ஒரு துறைமுகத்தைக் குறிப்பிடுகிறான். அது அநேகமாகப் புதுவையாக இருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். பாண்டி நாட்டுக் கொற்கைப்