பக்கம்:சிலம்பின் கதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரை காதை

137



கதவுகள் பழையபடி திறந்து கொண்டன. அரசன் பெரு மகிழ்வு கொண்டான்.”

“நாட்டில் பெருவிழா எடுத்தான்; சிறைக்கதவுகளைத் திறந்து விட்டான். இறைப்பொருள் தராதவரை ஒறுக்காமல். அவர்களுக்கு விடுதலை தந்தான். புதிய சட்டம் ஒன்று தீட்டி அதனை வெளிப்படுத்தினான். பிறர் தந்த பொருள் அது படுபொருள் எனப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட வர்க்கே அது உரியது என்றான். மற்றும் மண்ணில் கிடைப்பது எடு பொருள் எனப்பட்டது. புதையல் எடுப்போருக்கு அது உரியது ஆகும் என்றான். இவ்வறு படுபொருளும் எடுபொருளும் அரசுக்கு உரிமை இல்லை என்று அறிவித்துவிட்டான். கொள்வார்க்கே உரியது என்று அறிவித்தான். செய்த தவற்றைத் திருத்திக் கொண்டான். இவ்வாறு தன்னைத் திருத்திக் கொண்டது வேறு யாரும் இல்லை; இதே பாண்டியன் நெடுஞ்செழியன் தான்; இப் பொழுது திருத்த முடியாத தவற்றினைச் செய்து விட்டான். விதி ஆற்றல் மிக்கது.”

“அதற்குக் காரணம் இவ்வாறு நடக்க வேண்டும் என்று விதி வகுக்கப் பட்டுவிட்டது. ஆடி மாதம் நிறை யிருள் நாளில் எட்டாம் நாளில் வெள்ளிக்கிழமை அன்று இந்நகர் அழிய வேண்டும் என்று விதி ஏற்பட்டு விட்டது: அதையாரும் மாற்றமுடியாது நிமித்திகர்கள் முன் கூட்டி உரைத்து இருக்கின்றனர்”

“அதன்படிதான் இவை நடைபெறுகின்றன. மதுரை மாநகர் மட்டுமன்று; அதன் அரசும் கேடு உறும் என்று ஏடுகள் கூறி விட்டன. இது நகர் அழிவுக்கும் அதன் அரசு வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்” என்று அத் தெய்வம் விளக்கம் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/138&oldid=936457" இலிருந்து மீள்விக்கப்பட்டது