பக்கம்:சிலம்பின் கதை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சிலம்பின் கதை



வில்லவன் கோதை என்னும் அமைச்சன் சேரனின் பழைய வெற்றிகளை எடுத்து விளம்பி வாழ்த்துக் கூறினான்; “கொங்கர் களத்தில் சோழரும் பாண்டியரும் தோற்றுத் தம் கொடிகளாகிய மீன் கொடியையும், புலிக்கொடியையும் விட்டுச் சென்றனர். மற்றும் வட வாரியருடன் சிற்றரசராகிய கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர் இவர்கள் போர் செய்து தோற்று ஓடினர். கங்கைப் பேரியாற்றில் உன் தாயின் இறுதிச் சாம்பலைக் கலக்க அதனை நீராட்டிய நாளில் எதிர்த்த ஆரிய மன்னர் ஆயிரவரையும் அஞ்ச வைத்தனை!”

“ஆரிய மன்னர் ஆயிரவர் அன்று தோற்று ஒடினர். இப்போர்களைக் கண்ட யாம் அவற்றை நினைத்துப் பார்க்கிறோம். கூற்றுவனும் வியக்கும் வண்ணம் ஆற்றலோடு போர் புரிந்தாய்! தமிழக மன்னன் நீ இமயத்து அரசர்க்கு இதனைத் தெரிவித்து முடங்கல் ஒன்று நீ எழுதினால் போதும் அவர்கள் அடங்கியவராய்ச் சிலை வடிக்கக் கல் தந்து விடுவர்; அதனால் வில் புலி கயல் பொறித்த முத்திரை இட்டு முடங்கல் அனுப்புக” என்றான்.

வில்லவன் கோதை உரைத்தநல்லுரைகளைக் கேட்ட அழும்பில்வேள் என்னும் மற்றொரு அமைச்சன் அதற்கு ஒரு திருத்தம் கூறினான். “செய்தி அனுப்பத் தேவை இல்லை; இங்கே அம்மன்னர் தம் ஒற்றர் அங்கங்கே தங்கி இருக்கின்றனர். அவர்களே சென்று செய்தி செப்புவர்” என்று அறிவித்தான் அதனைச் சேரன் ஏற்றுக் கொண்டு போர் தொடுக்கத் தன் நகராகிய வஞ்சி மாநகரை அடைந்தான்.

மன்னவன் வெற்றியை விளம்பி வாழ்த்தியபின் “வடஅரசர்க்கு இங்கிருந்து முரசு அறைந்து செய்தி அறிவிக்க” என்று அழும்பில் வேள் ஆணையிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/151&oldid=936471" இலிருந்து மீள்விக்கப்பட்டது