பக்கம்:சிலம்பின் கதை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

சிலம்பின் கதை



அனைத்தும் நடிப்பு என்று கூறும்போது நாட்டியக் குறியீடு வைத்து அவற்றை எள்ளி நகையாடுகிறான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறியீடு; கண்கூடுவரி, காண்வரித் தோற்றம், உள்வரி ஆடல், புன்புறவரி, கிளர்வரிக்கோலம், தேர்ச்சிவரி, காட்சிவரி எடுத்துக் கோள்வரி எனப் பெயர்கள் தருகின்றான். எனவே மாதவிபால் இவன் நாட்டம் கொண்டதற்கு இவன் கலையுணர்வும் காரண மாகிறது.

'ஆடல் பாடல் அழகு' இம்மூன்று அவனைக் கவர்கின்றன. செல்வச் செருக்கு உடன் சேர்கின்றது. விலை கொடுத்து வாங்குவதில் அவன் முன் வருகின்றான். இவ்வளவு தொகை கொடுப்பதற்குக் காரணம் அவன் செல்வச் செருக்கு என்று கூறலாம். எனவே அவன் கலை ஆர்வம், மகிழ்வு நாடும் மனம், செல்வ மிகுதி இவையே அவன் மாதவிபால் உறவு கொள்வதற்குக் காரணம் ஆகின்றன.

மாதவி அவனை முழுவதும் காதலிக்கிறாள். 'காதலன்' என்றே அவன் கூறப்படுகிறான். அவளைக் 'காதலி' என்று எங்குமே அவன் குறிப்பிட்டதாகத் தெரிய வில்லை. இளங்கோவடிகளும் அவனுடைய காதலில் என்று மாதவியைக் கூறவே இல்லை.

'விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்' என்று கூறப்படுகிறதே அன்றி விடுதல் அறியாக் காதலன் ஆயினன் என்று கூறவே இல்லை. அவளிடம் அவன் கண்ட கவர்ச்சி மூன்றாவதாகக் குறிப்பிட்ட அழகு, அதுதான் அவனைக் கவர்கிறது. 'கோலங் கொண்ட மாதவி' என்றுதான் அவள் குறிப்பிடப்படுகிறாள். அவன் முன் அவள் அழகாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்பது தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/205&oldid=936527" இலிருந்து மீள்விக்கப்பட்டது