பக்கம்:சிலம்பின் கதை.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு காண் காதை

55


கதவை மூடினர்; அதன் சிற்ப வேலைப்பாடுகள் பொற்புடன் திகழ்ந்தன. மறக்க முடியாத ஓவியங்கள்; ஆட்டுக்கிடாய், கவரிமான்; அன்னப்பறவை இம்மூன்றும் முற்றத்தில் நட்புடன் திரிந்து கொண்டிருந்தன. பலமுறை அவற்றைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள்; அவற்றை விட்டு வர மனம் இயையவில்லை; மறுபடியும் அவற்றைப் பார்த்துவிட்டு அகன்றனர்.

வீட்டுமுன் நீண்ட வழிப்பாதை, அதனை நெடுங்கழி என்றனர். அதனைக் கடந்து ஊர்ப்புறத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் திருமாலின் திருக்கோயிலைக் கடந்தவராகி அதன் வலப்பக்கம் சென்றனர். அடுத்தது புத்தபள்ளி; அங்கே அந்தரத்திலிருந்து முனிவர்கள் வந்து தங்கி அறிவு உபதேசம் செய்வது வழக்கம். அதனைக் கடந்து அடுத்து இருந்த சமணர் சிலாதலத்தையும் கண்டவராகி அதனையும் கடந்தனர். அதன் பின் ஊருக்கு வெளியே இருந்த பெருவழி; அதன் வழியே நடந்து இலவந்திகை என்னும் சோலையின் வழியே சென்று, காவிரியின் வடக்குப் பக்கம் கவுந்தி அடிகள் தங்கி இருந்த சமணப் பள்ளியை அடைந்தனர். அப்பள்ளியின் மதிற்புறத்தில் சிறிது தங்கி ஓய்வு எடுத்தனர். காவதம் தூரமே அவர்கள் கடந்தனர். அதற்குள் கண்ணகி களைப்புற்றாள். இன்னும் சிறிது தூரத்திலேயே மதுரை இருக்கும் என்று அவள் எண்ணிச் சிரித்துக் கொண்டே, “மதுரை முதூர் எங்கே உள்ளது” என்று விளித்துக் கேட்டாள். அனுபவமில்லாத பெண்; மெல்லிய சொற்கள்; அவனும் “காவதம் முப்பதுதான்” என்று மிக எளிதாக எடுத்து உரைத்தான். மிகவும் அருகிலேயே உள்ளது என்று அவளுக்குச் சிரமம் தோன்றாது இருக்கக் கூறினான். முரண்சுவை அமைந்த உரையாடல் அவர்களுக்கு அயர்வு சிறிது போக்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/56&oldid=963758" இலிருந்து மீள்விக்கப்பட்டது