நாடு காண் காதை
59
ஆகியது; உழவர்கள் எழுப்பிய ஓசை அவர்களை மகிழ்வித்தது; காவிரி நீர் இடையறாது சென்று கொண்டிருந்தது. அதன் சலசலப்பு அவர்களுக்குக் கலகலப்பைத் தந்தது. நீர் இறைக்க அவ் உழவர்கள் ஏற்றங்களையும், நீர்க் கூடைகளையும் தேடவில்லை; ஆற்றுநீர் வாய்க்கால் வழி ஓடி வயல்களில் பாய்ந்தது. அதன் ஒலி செவிக்கு இனிமை தந்தது. வயல்களில் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளர்ந்தன. இவ்வயல்களை அடுத்த கயங்களில் தாமரைகள் பூத்து விளங்கின. அத்தடங்களிலும், அடுத்துள்ள சோலைகளிலும் நீர்ப் பறவைகள் பல குரல் எழுப்பின. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கம்புள் கோழி, நாரை, அன்னம், கொக்கு, காட்டுக்கோழி, நீர்க்காக்கை, உள்ளான், ஊரல், புள், புதா மற்றும் நீர்ப்பறவைகள் பல ஆகும். இவை கூடி எழுப்பிய குரல் போர்க் களத்து வீரர்கள் எழுப்பும் பல்வேறு வகை ஒலிகளாகக் கலந்து ஒலித்தது. அங்கே என்ன? அது போர்க்களாமா? வியத்தகு காட்சியாக இருந்தது; பேரிரைச்சல் கேட்பதற்கு இனிதாக விளங்கியது.
உழவர்கள் இல்லங்கள் அங்கங்கே அவர்கள் எழுப்பிய ஆரவார ஒலிகள் கேட்பதற்கு இனிமை தந்தது. சேற்றில் புரண்டு எழுந்த எருமை தன் தினவைப் போக்கிக் கொள்ள நெற் கூடுகளில் வந்து உராய அக்கூடுகளில் கொட்டி வைத்த தானிய வகைகள் நெற்கதிர்களில் சிந்த அந்தக் காட்சியைக் கண்டு கைவினைத் தொழிலரும், உழவர் பெருமக்களும் உவகை கொண்டு ஆரவாரித்தனர். அது இன்ப ஒலியாக இசைத்தது.
உழத்தியர்கள் வயல்களத்தில் புகுந்து களை பறித்தனர்; நாற்று நட்டனர்; சேறுபடிந்த கோலம் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. உழைத்த களைப்புத் தீரத் தழைத்த கள்ளைப் பருகிக் களி மகிழ்வு கொண்டு புதுப்