பக்கம்:சிலம்பின் கதை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறஞ்சேரி இறுத்த காதை

83



அந் நதியில் மணல் மேடிட்ட கரைகள் நதிக்கு அணி செய்து அழகு தந்தது. மணல்குன்றுகள் அதன் வனப்புமிக்க கொங்கைகள் ஆயின. முருக்கமலர்கள் சிவந்த வாய் ஆயின; முருக்க மலர்கள் இதழ்ச் செவ்வாய் ஆயின. நீரில் அடித்து வந்த முல்லை மலர்கள் அதன் பல்லை நினை வுறுத்தின. அவை அதன் பற்கள் ஆயின. ஒடித்திரிந்த கயல்கள் அந்நதியின் கண்கள் ஆயின. கருமணல் கூந்தலைக் காட்டியது. இந்த மண்ணுக்கு வளம் தந்து தாயாக இருந்து பால் ஊட்டும் பாங்கில் நீர் தந்த இவ்வைகை நதி புலவர் புகழ்ந்து பாடும் பெருமை பெற்றது.

இந் நதி பூவாடை போர்த்துக் கண்ணிர் மல்கிக் காட்சி அளித்தது. இவர்கள் படும் துயரம் கண்டு விடும் கண்ணிர் அது; கள்நீர் கண்ணிர் எனப்பட்டது. அதனை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது அது; வருத்தத்தில் அது பூக்களைப் போர்வையாகக் கொண்டு தன்னை மூடிக் கொண்டது. அதனைக் கண்ட இம் மூவரும், “இது வெறும் புனல் ஆறு அன்று; பூ ஆறு” என்று கண்டு வியந்தனர். அன்னநடை பயின்ற அழகி கண்ணகியும், அவள் கணவன் ஆகிய கோவலனும் அதனைத் தொழுது வணங்கினர்.

அதன் கரையைக் கடந்து நகருக்குச் செல்ல வேண்டுவது ஆயிற்று; அங்கு உயர்குடி மக்கள் உவகையுடன் உல்லாசப் பயணம் செய்யும் அம்பிகள் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் வடிவுக் கேற்ப அவை கரிமுக அம்பி, பரிமுக அம்பி, அரிமுக அம்பி எனப் பேசப்பட்டன. அவற்றை நாடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அங்கு இருந்த மரப்புணையாகிய கட்டு மரம் அதனைத் தேர்ந்து அதில் அமர்ந்து அவ்வாற்றினைக் கடந்தனர். வைகையின் மலர்ப்பொழில் சூழ்ந்த தென் கரையை அடைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/84&oldid=936397" இலிருந்து மீள்விக்கப்பட்டது