பக்கம்:சிலம்புநெறி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தவத்திரு அடிகளார்-சிந்தனைத் துளிகள்


ஒருமைப்பாடு - ஒருமைப்பாடு மனித நேய அடிப்படையில் மட்டுமே உருவாகும்.

இலக்கியம்- இலக்கியங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்காகவே தோன்றின. ஆனால் நடைபெற்றிருப்பது உரை விளக்கமே.

சமுதாயம்- கோடி, செங்கல்கள் கொட்டிக் கிடந்தால் கட்டடமாகிவிடுமா? அவற்றை முறையாக அடுக்கினால் வீடு! அதுபோல கோடிக்கணக்கில் மனிதர்கள் இருந்தாலும் சமுதாயம் தோன்றி விடுவதில்லை. ஒருவரை ஒருவர் தழுவியும் தாங்கியும் ஒப்புரவு அறியும் பண்புடன் வாழ்ந்தாலே சமுதாயம் தோன்றும்.

கேள்வி- திறந்த வீட்டுக்கு நல்ல காவல் தேவை. அதுபோல காதுகளைத் தருவதில் கவனம் தேவை.

முயற்சி- ஒரு மூச்சு கொள்முதல், ஒரு மூச்சு விடுதல் இதைப்போல வாழ்க்கையின் எந்த ஒரு செயலிலும் கொள்முதலும் விடுதலும் இருக்கவேண்டும்.

கல்வி- வாழ்க்கை முழுவதும் நூல் படிக்கும் பழக்கம் தொடரின், இன்பம் பயக்கும்.

ஒழுக்கம் - மனிதனை மனிதனாக மதிப்பது ஒழுக்கம்.

உழைப்பு- வயிறு இல்லாது போனால் பலர் உழைக்கவே மாட்டார்கள்.

நட்பு- செல்வம், செல்வாக்கு இரண்டும் ஏராளமான நண்பர்களைக் கூட்டி தரும். இதனால் பயனில்லை. துன்பத்தில் துணையாய் அமைவோரே நண்பர்கள்.

சாதனை - மண்ணிலிருந்து மனிதரை விண்ணுக்கு ஏற்றுவது சாதனையல்ல. மண்ணை விண்ணகமாக்குவதே சாதனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/10&oldid=1062468" இலிருந்து மீள்விக்கப்பட்டது