பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

தேக்கும் திமிசும் கருங்காலியும் கடம்புமாக எத்தனை எத்தனையோ மரங்கள், செடிகள், கொடிகள்! வண்ண வண்ணப் பூக்கள்! சில மரங்களில் இலைகளும் தளிர்களுமே மலரைப் போல வண்ணம் பெற்றுக் கண்ணைப் பறித்தன.

இந்தக் காட்சிகளைக் கண்டு யாவரும் மகிழ்ந்தார்கள். புலவராகிய சாத்தனார் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்தார். அவற்றின் அழகிலே சொக்கிப் போனார்.

செங்குட்டுவன் பேராற்றங்கரைக்கு வந்து தங்கியிருக்கும் செய்தியை மலைவாழ் மக்கள் அறிந்தார்கள். பெரிய கூடாரங்கள் அமைத்து அவனும் அவனுடன் வந்தவர்களும் தங்கியிருந்தார்கள். அவன் வருவது முன்பே அவர்களுக்குத் தெரிந்த செய்திதான். ஆதலின் அவர்கள் கூட்டமாகத் தங்கள் மன்னனைக் காணப் புறப்பட்டார்கள்.

காட்டில் தங்களுக்குக் கிடைக்கும் பொருள்களைக் கையுறையாக ஏந்திக்கொண்டு அவர்கள் வந்தார்கள். பேராற்றங்கரையில் அவர்கள் காணிக்கைகளுடன் வந்து நின்ற காட்சியே அவர்களுக்கு இருந்த அன்பைக் காட்டியது. அவர்கள் வரிசையாக நிற்பதைக் கண்டார் சாத்தனார். “வஞ்சிமா நகர் அரண்மனை முற்றத்தில் அரசர்பிரானுடைய காட்சிக்காகத் திறையுடன் சிற்றரசர்கள் காத்து நிற்பதுபோல அல்லவா இருக்கிறது, இந்தக் காட்சி?” என்று வியந்தார்.

“அந்த அரசர்கள் மன்னர்பெருமானைக் கண்டு அஞ்சுபவர்கள்; அவர்கள் உள்ளத்தில் உண்மையன்பு