பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஆனாலும் அந்தக் கருத்தை முதலில் வெளியிட அவர் விரும்பவில்லை. இளங்கோவடிகளையே இயற்றும்படி மரியாதைக்குச் சொல்லலாம். இவர் சேர குலத்தில் பிறந்தவர். ஆதலின் மற்ற மன்னர்களைப் பற்றிச் சொல்ல இவர் விரும்பமாட்டார். நம்மையே இயற்றச் சொல்லி விடுவார்” என்று எண்ணியே அப்படிச் சொன்னார்.

இளங்கோவடிகளோ, “பார்க்கிறேன். இந்த வரலாறு என் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கிவிட்டது. பல அரிய கருத்துக்களை உடையது இந்தக் கதை என்பதை உணர்கிறேன். நன்றாகச் சிந்தித்து எழுதி முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறைவன் திருவருள் கூட்டுவிக்கும் என்றே எண்ணுகிறேன்” என்று சொன்னார். அது கேட்ட சாத்தனாருக்கு ஏமாற்றம் உண்டாகிவிட்டது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளலாமா? “நன்றாகச் செய்து முடியுங்கள்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.