பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இளங்கோ, “நாம் முன்பு ஒருகால் பேசிக் கொண்டது இறைவன் அருளால் நிறைவேறி விட்டது. இருவரும் பெருநூல்களைச் செய்யவேண்டுமென்று உரையாடியது நினைவு இருக்கிறதா?” என்றார்,

“ஆம் நன்றாக நினைவில் இருக்கிறது. நான் இந்தக் காவியத்தை முடித்துப் பல நாட்களாயின. வேறு வேலைகள் இருந்தமையால் முன்பே வர முடியாமற் போயிற்று” என்று சாத்தனார் சொன்னார்.

இரண்டு புலவர்களும் ஒருவருக்கொருவர் தம் காவியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டார்கள். அடுத்தடுத்து இந்தக் காவியங்களை அரங்கேற்றுவது என்று தீர்மானித்தார்கள்.

சாத்தனார் செங்குட்டுவனிடம் சென்று தங்கள் கருத்தை எடுத்துச் சொன்னார். அவன் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தான்.

அரங்கேற்றம் நடைபெற்றது. முதலில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றினார். அந்த அவையில் தலைவராகச் சாத்தனார் இருந்தார். அடுத்து, சாத்தனார் மணிமேகலையை அரங்கேற்றும்போது இளங்கோவடிகள் தலைவராக இருந்தார்.

இரண்டு நூல்களையும் யாவரும் கேட்டு இன்புற்றார்கள். சிலப்பதிகாரத்தின் அமைப்பும் சுவையும் சமரச எண்ணமும் மிகச் சிறந்தனவாக இருந்தன. ஆதலால் அதை அதிகமாகப் புலவர் பாராட்டத் தொடங்கினர். அழகான வருணனைகளும், பாடுவதற்குரிய இசைப் பாட்டுக்களும், பண்பு நிறைந்த உரையாடல்களும் நிரம்பிய அது, விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவிப் பெருமையைப் பெற்றது. அம்பிகையின் அடியார்கள் வேட்டுவ வரியில் உள்ள பாடல்களைப் பாடி