புலவர் கா. கோவிந்தன்
97
முத்தமொடு உற்றதை எவன் கொல்?” (சிலம்பு:2:63-64; 69-70) எனப் பாராட்டுவது கொண்டு, கண்ணகி பால் மங்கல அணி அல்லாமல், ஒரு காழ் முத்தம் போலும் பிற அணிகள் பல இருந்தன என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
அது போலவே, கோவலன் கண்ணகியை மறந்து, மாதவியை அடைந்து விட்ட நிலையில், கண்ணகி மங்கல அணி தவிர்த்துப் பிற அணிகள் அணிவதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்பதை உணர்த்த, கால் சிலம்பையும், இடை மேகலையையும், காது குழையினையும், இழந்து நின்ற நிலையை, “அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய, மென்துகில் அல்குல் மேகலை நீங்க… கொடுங் குழை துறந்து வடிந்து வீழ்காதினள்” (சிலம்பு: 47-51) என்ற அடிகளால் ஆசிரியர் விளக்குவது கொண்டு, கோவலன் மாதவியை அடைந்த தொடக்க நாளன்றும், கண்ணகிபால், சிலம்பு மட்டுமல்லாமல், மேகலை, குழை போலும் பிற அணிகள் இருந்தன என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வளவு அணிகள் இருந்திருக்கவும், தன் இல்லாமையைக் கூறி வருந்திய கோவலனுக்குச் “சிலம்புள” எனச் சிலம்பு ஒன்றை மட்டுமே கண்ணகி கூறியிருப்பது நோக்க, அப்போது, அது தவிர்த்துப் பிற அணிகளையெல்லாம் கோவலன் அழித்து விட்டான் என்றே கொள்ள வேண்டும் என வாதிடுவோர் கூற்றில் வலுவில்லை எனக் கூறி மறுத்து விட இயலாது என்பது உண்மை.
வயங்கிணர்த் தாரோனாகிய தன் மகன் கோவலன், தயங்கினர்க் கோதையாம் கண்ணகியோடு மகிழ்ந்து வாழ்ந்திருக்கும் நாட்களில் அவர்கள் இருவரும் தனியே இருந்து இல்லறம் ஆற்றிப் பெறும் சிறப்பினைக் காணும் பேருள்ளத்தோடு, கோவலனைப் பெற்ற பெருமனைக்