பக்கம்:சிலம்பொலி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

103

வண்ணனை விழுமம் தீர்த்த விளக்கு கொல்?” (சிலம்பு: 16 : 27:28, 47-51) என்ற சிலப்பதிகாரத் தொடர்களைக் காண்க.

தன் கணவனுக்குத் தவறிழைத்த மன்னன் மாநகர் மதுரை. ஆகவே, அம்மதுரையை எரித்து அழித்த கண்ணகி செயல், “கொடிது அன்று” எனப் பாராட்டும் அம்மாநகரத்துப் பெருமனைக் கிழத்தியர்க்குக் கண்ணகி சிறந்த அணிகள் அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று” (சிலம்பு: 22 : 135-136) என்ற அவர் கூற்றில் அவர்கள் கண்ணகியைச் “சேயிழை நங்கை” என்றே குறிப்பிட்டிருப்பது காண்க.

“என் துயர் அறிதியோ?” என்ற வினாவிற்கு, “அறிவேன்” என விடையிறுக்கும் போதும், “மதுரை மாநகரும் அரசும் கேடுறும் எனப் பண்டே உரைக்கப்பட்டது” என முற்பிறப்பு நிகழ்ச்சி கூறிய போதும், “உன் கணவன் கோவலன் முற்பிறப்பில், அரசுபணி புரிந்த பாதகன் என்போனாவன்” எனக் கண்ணகியின் முற்பிறப்பு வரலாறு கூறும் போதும், அவை கூறிய மதுராபுரித் தெய்வத்தின் முன், கண்ணகி, பசும் பொன்னால் பண்ணப்பட்டுக் கை நிறைய அணிந்த தொடி போலும் அழகிய அணிகள் பல அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “அரஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய்,” “உரைசால் மதுரையோடு அரை கேடுறும் எனும் உரையும் உண்டே, நிரை தொடியோயே!”, “முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன்” (சிலம்பு : 23 : 21; 135-136; 152-153) என்ற தொடர்களில், மதுராபுரித் தெய்வம், கண்ணகியை “அணி இழாஅய்”, “நிரை தொடியோயே!”, “பைந்தொடி” என்றே விளித்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/109&oldid=1789395" இலிருந்து மீள்விக்கப்பட்டது