புலவர் கா. கோவிந்தன்
13
“நாரை
காலை இருந்து மாலை சேக்கும்
தென்கடல்.”
—ஐங்குறு நூறு : 157
“காலை அந்தியும், மாலை அந்தியும்!”
“இல்லாகியரோ, காலை, மாலை.”
—புறநானூறு : 34; 232
ஆக, எடுத்துக் காட்டிய சான்றுகளால் கானல் வரி முடிவில், மாலை வாரார் ஆயினும், காலை காண்டுவம் என்ற மாதவி கூற்றில், மாலையை அடுத்துக் காலை வந்துள்ளமைக்கு ஈடாக, காலை கோவலனுக்கு வழி கொடுத்து அனுப்பிய கண்ணகி, மாலை, அவன் கொலையுண்டு கிடப்பதைக் கண்டாள் என்ற இளங்கோவடிகளார் கூற்றில், காலையை அடுத்து மாலை வந்துளதைக் காட்டியிருப்பது பொருந்தாது என்பது உறுதியாகிறது. நிற்க,
இனிக் “கோவலன் உணவுண்டு சென்றதும், கொலையுண்டதும் ஒரு நாள் நிகழ்ச்சிகள். ஆய்ச்சியர் குரவை ஆடியதும், கொலையுண்ட கணவனைக் கண்ணகி கண்டதும் மறுநாள் நிகழ்ச்சிகள்” என்ற ம.பொ.சி. அவர்களின் முடிவு பற்றிய ஆய்வினை மேற்கொள்வாம்.
கோவலன் உணவு உண்டு சென்றதும், கொலையுண்டதும் ஒரு நாள் நிகழ்ச்சிகள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை; ஆனால், அன்று அவை நிகழ்ந்த நேரங்கள் குறித்து ம.பொ.சி. அவர்கள் கூறும் கருத்து, வினாவிற்கு உரியது.
கோவலன் உணவு உண்ட நேரம் எது?