புலவர் கா. கோவிந்தன்
15
வையெரி முட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற்கு ஆக்கி”
[சிலம்பு : 16:18-34] என்ற இத்தொடர்களில் ஆளப்பட்டிருக்கும் சில சொற்றொடர்களையும், சொற்களையும், அச்சொற்களின் பொருளையும், வினைச் சொற்கள் அடுத்தடுத்து ஆளப்பட்டிருக்கும் நிலையினையும் கூர்ந்து நோக்குதல் வேண்டும்.
அடிசில் ஆக்குதற்கு வேண்டிய பொருள்களை அளிக்குமாறு பணிக்கும் மாதரி, “அளிமின்” என ஆணை இடுவதற்கு முன்பு, “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என விருந்தினரின் இயல்பைக் கூறியுள்ளாள். “அடிசில்” என வாளா கூறாது. “நாள்வழிப் படூஉம் அடிசில்” எனச் சிறப்பித்தும், அது போலவே “அளிமின்” என்று மட்டும் கூறாது, “நெடியாது அளிமின்” என விரைவு ஏற்றியும் கூறியுள்ளாள்; ஏன்?
சாவக நோன்பிகள் இரவு உண்ண மாட்டார்கள். . “சாவக நோன்பிகள் ஆதலின் இரவு உண்ணார் என்பது“ என்ற அரும்பத உரையாசிரியர் விளக்கமும் காண்க.
[கோவலனும், கண்ணகியும், மாதரி இல்லத்தில் புகுந்த அன்று இரவு, உணவு உட்கொள்ளவில்லை என்பதை, திரு. ம.பொ.சி. அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். “மாதரி இல்லத்தில் புகுந்த அன்று இரவு, கோவலனும் கண்ணகியும் உணவு கொள்ளவில்லை“ [பக்கம்: 126] என அவர் கூறியிருப்பது காண்க.]
இரவு உண்ணா நோன்பு மேற்கொள்பவர், நோன்பு முடித்து, உணவு உண்ணும் நேரம் பொதுவாகக் காலை நேரமே ஆகும். வைகுண்ட ஏகாதசி, மாசி சிவராத்திரி