புலவர் கா. கோவிந்தன்
19
ஆக்குவதற்காம் பொருட்களை அளிப்பது அன்றிரவே முடிந்து விட்டது. அட்டில் ஆக்குவது மட்டுமே மறுநாள் நடைபெற்றது. அதுவும், ம.பொ.சி. கூறுவது போல், “பொழுது விடிந்து நெடுநேரத்திற்குப் பின்பு, கிட்டத்தட்டப் பகல் நேரத்தில்” [பக்கம்: 139] அன்று; மாறாக, விடியற் காலத்திலேயே நடந்து முடிந்து விட்டது.
பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பெயரும் மாதரியைக் கௌந்தி அடிகள் கண்டது.—ஞாயிற்றின் ஒளிக் கதிர் மறையும் நேரம். அதன் பின்னர்க் கண்ணகி சுற்ற நலன், கோவலன் குடிப் பெருமை, அடைக்கலப் பொருள் ஏற்று ஆவன செய்தலால் ஆகும் அறப்பயன் ஆகியவற்றை விளக்கச் சிறிது காலம் கழிந்திருக்கும். அதன் பின்னர், “நீட்டித்திராது நீ போ” என்பதற்கேற்ப, எவ்வளவுதான் விரைவு காட்டியிருந்தாலும், அவ்விருவரையும் உடன் கொண்டு, மதில் கடந்து, ஆயர்பாடி அடைதல், ஆங்கு அவர்கள் இருத்தற்கேற்ற மனையைத் தேர்ந்து, அதை ஏற்புடையதாகத் துப்புரவு செய்து தருதல், கண்ணகியை நீராட்டி ஒப்பனை செய்து பாராட்டல், தன் மகள் ஐயையையும், பிறரையும் அழைத்து அறிமுகம் ஆக்குதல், பின்னர் அட்டிலுக்கு ஆவன அளிமின் எனப் பணித்தல், அப்பணி ஏற்று ஆயர் மகளிர் அவற்றைத் திரட்டித் தருதல் ஆகிய இந்நிகழ்ச்சிகளை எவ்வளவு விரைவாகச் செய்து முடித்தாலும், முடிக்க இரவில் நெடு நேரம் ஆகியிருக்கும். நள்ளிரவைத் தாண்டியிருக்கவும் கூடும். அத்துணை நேரம் கடந்த பின்னர் விடியற் போதில் உண்ணற்காம் உணவினைச் சமைக்க வேண்டின், உணவுத் தொழிலை உறங்காதே மேற்கொள்வது இன்றியமையாதது. அதற்கேற்பவே, கண்ணகியும் அட்டில் தொழிலை அப்போதே தொடங்கி விடியற் போதில் முடித்து விட்டாள்.