பக்கம்:சிலம்பொலி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சிலம்பொலி

யானைக் கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசன் இறந்த போது, வருந்திப் பாடிய, கூடலூர்க் கிழார் என்ற புலவர், “வானத்திலிருந்து விண்மீன் ஒன்று வீழ்ந்தது. அது கண்டு, யாருக்கு என்ன கேடு நேருமோ என அஞ்சியிருந்தோம். ஏழாம் நாள் வந்தது. அந்தோ! இரும்பொறை இறந்து போனான்—”

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே;
அதுகண்டு,யாமும், பிறரும் பல்வேறு இரவலர்
அஞ்சினம், ஏழுநாள் வந்தன்று, இன்றோ
மேலோர் உலகம் எய்தினன்!”

—புறம்:229

எனக் கூறுவதிலிருந்தும், வரவிருக்கும் கேட்டினை அறிவிக்க உற்பாதங்கள் முன் நிகழுமே யல்லாது கேடு வந்துற்ற பின்னர் நிகழ்வதில்லை என்பது உறுதி செய்யப்படும். ஆகவே, பால் உறையாமை முதலாம் உற்பாதங்களையும், அவை கண்டு மேற்கொண்ட குரவைக் கூத்தையும், கோவலன் கொலைக்கு முந்திய நிகழ்ச்சிகளாகக் கொள்வதே முறை. .

குடப்பால் உறையாமை கண்ட மாதரி கூறுவதாக வரும் உரைப்பாட்டு மடையிலும், கருப்பத்திலும் நிகழ்ந்து விட்ட நிகழ்ச்சியை உணர்த்தும் வகையில், “வந்தது ஒன்று உண்டு“, “வந்ததோர் துன்பம் உண்டு” என இறந்த காலம் குறித்து வாராமல், நிகழவிருக்கும் நிகழ்ச்சியை உணர்த்தும் வகையில், “வருவது ஒன்று உண்டு, வருவதோர் துன்பம் உண்டு” [சிலம்பு:17: உரைப்பாட்டு மடை] என எதிர் காலம் குறித்தே வந்திருக்கும் தொடர்களும், மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்து நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/32&oldid=1775480" இலிருந்து மீள்விக்கப்பட்டது