புலவர் கா. கோவிந்தன்
27
“குடத்துப்பால் உறையவில்லை; உறியிலிட்ட வெண்ணெய் உருகாமலே நிற்கும் என்ற காரணத்தால், வரக் கூடிய துன்பம் ஒன்றுண்டு என ஐயுற்றல்லவா ஆய்ச்சியர் குரவைக் கூத்து நிகழ்த்தி, வரவிருக்கும் துன்பத்தைத் தவிர்க்கத் திருமாலை வழிபடுகின்றனர்?” [பக்கம் : 137] எனக் கூறி, மேற்கூறிய கருத்தை ஓரிடத்தில் ஏற்றுக் கொள்ளும் ம.பொ.சி.யார், “குரவை நிகழ்ந்த முந்திய நாள் மாலையிலேயே கோவலன் கொலையுண்டு விட்டான்” [பக்கம்:125] எனக் கூறிப் பிறிதோரிடத்தில் குழப்புவது ஏனோ?
தான் படைத்த உணவுண்டு, காலையில் தன்னிடம் விடை பெற்றுச் சென்ற கணவனின் உயிரற்ற உடலைக் கண்ணகி மறு நாள் மாலைதான் கண்டாள் என்றால், அந்த ஒரு நாளில் அவள் நிலை என்ன? அது பற்றி இளங்கோவடிகளார் யாதும் கூறவில்லையே ஏன்? என்ற வினா எழல் இயல்பே.
“கோவலன் விடை பெற்றுச் சென்ற பின்னர், அவன் கொலையுண்ட செய்தி அறியா நிலையிலேயே கண்ணகி ஒரு இரவை மாதரி இல்லத்தில் கழித்தாள்” [பக்கம்: 123] என்கிறார் ம.பொ.சி.
புகார் நகர் நீங்கி, மதுரைக்குப் புறப்பட்ட அந்நாள் தொட்டுக் கண்ணகி கோவலனை ஓர் இரவும் பிரிந்து இருந்தவள் அல்லள். அங்ங்னமாகக் கோவலனைச் சிலம்பு விற்கப் போக விட்டு, ஒரு நாள் பகல், இரவு, மறு நாள் பிற்பகல் வரையும் பிரிந்திருந்தாளாகக் கூறுவதும், அதுவும் கணவன் கொலையுற்றதைக் குறிப்பால் அறிந்து கொள்ளும் வரை பிரிவுத் துயர் உறாது இருந்தாளாகக் கூறுவதும் அறவே பொருந்தா.