34
சிலம்பொலி
கண்ணகி காணும் போது, வாள் பாய்ந்த புண்ணிலிருந்து குருதி கொப்புளித்துக் கொண்டிருந்தது உண்மை. கண்ணகி “புண் தாழ்குருதி புறஞ்சோரக்” (சிலம்பு: 19:37) கண்டாள் எனப் பாடித் தம் வாயால் கூறியதோடல்லாமல் “புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ” (சிலம்பு: 19:48) என அக்காட்சியைக் கண்டு புலம்பியதாகப் பாடிக், கண்ணகி வாயாலும் கூறியுள்ளார். ஆகவே, கோவலன் கொலையுண்ட அன்று மாலையே, கண்ணகி அவன் உடலைக் கண்டாள் என்பதும், அதன் தொடர்பாக ஆய்ச்சியர் குரவை நிகழ்ந்த அன்றே கொலையும் நடைபெற்றது என்பதும், இதனாலும் உறுதி செய்யப்படும்.
கோவலன் சாவக நோன்பியாதல் அறிந்து அடிசிற் பொருள்களை ஆயர் மகளிர் அன்றிரவே அளிக்க, அவை கொண்டு, கண்ணகி, விடியற் போதிலேயே உணவாக்கிப் படைக்க, அது உண்டு கோவலனும், காலையிலேயே விடை பெற்றுச் செல்ல, மாதரியும் மற்றவரும் அக்காட்சி கண்டு மகிழ்ந்திருந்த நிலையில், காலை முரசம் இயம்ப, அது கேட்டு மாதரி நெய்ம்முறை உணர்ந்து, அது மேற்கொள்ள முனைந்தவள், பால் உறையாமை கண்டு, கேடு வரும் என அஞ்சி, அது தீரக் குரவை ஆடப் பணித்தாள்.
குரவை ஆட்டத்தைக் காலையிலேயே தொடங்கி விட்டாலும், ஆடவும், பாடவும் வல்ல ஆயர் மகளிரைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களை ஆடரங்கில் நிற்க வேண்டிய நிலைகளில் நிற்க வைக்கவும், பின்னர்க் கூத்தின் ஒரு கூறும் விடாதபடி, முழுமையாக ஆடியும், பாடியும் முடிக்க நண்பகற் போது ஆகியிருத்தல் கூடும்.
ஆயர் பாடியில் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கோவலன் பொற்கொல்லனைக் கண்டு, சிலம்பு விற்க