பக்கம்:சிலம்பொலி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சிலம்பொலி

திரிதரு மறுகில், பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த மாமலர் நெடுங்கண் மாதவி மாலை, கோவலன் வாங்கி” (அரங்கேற்று காதை: 168-171) என்ற வரிகளைக் காண்க.

அது மட்டும் அன்று. மாதவியின் நற்றாய், தன் மகளுக்குத் துணையாக வர வேண்டிய ஆடவன், அவள் கலைத் திறம் அறிந்து பெருமைப்படுத்தும் பக்குவம் உடையவனாக இருக்க வேண்டும் என விரும்பவில்லை; மாறாக, ஆயிரத்து எண் கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கும் செல்வ வளம் உடையவனாக இருந்தால், அதுவே போதும் என்றே விரும்பினாள். “நூறுபத்து அடுக்கி, எட்டுக் கடை நிறுத்த வீறுயர் பசும் பொன் பெறுவது இம்மாலை; மாலை வாங்குநர், சாலும் நம் கொடிக்கு” (அரங்கேற்று காதை: 164-166) என்ற அவள் கூற்றினைக் காண்க.

ஆக, எந்நிலை நின்று நோக்கினும், மாதவியொடு கோவலன் உறவு கொண்டமைக்குக் கோவலனின் கலையார்வமே காரணமாம் என்பதற்கான அடிப்படைச் சான்று சிறிதும் இல்லை என்பதே முடிந்த முடிபாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/82&oldid=1779772" இலிருந்து மீள்விக்கப்பட்டது