பக்கம்:சிலம்பொலி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சிலம்பொலி

பின் ஒன்று கொண்டு, யான் போய் மாறி வருவன்” (கொலைக்களம்:92-93) எனக் கூறி, ஒற்றைச் சிலம்பைக் கொண்டு சென்றதன் முகத்தான், “கோவலன் சிந்தித்துச் செயல்படும் தெளிவுடையான் அல்லன்” என்ற குற்றச் சாட்டிற்கு வலுவேற்றி விடுவது அறிக.

வயிரம் முதலாம் நவமணிகளின் குணம் குற்றம் அறிந்த வல்லோர் இருந்து, தொழில் புரியும் நவரத்தின வணிக வீதியினையும், சாதரூபம் முதலாம் பொன்னின் இனம் அறிந்து தொழில் புரியும் பொன் வணிகர் வீதியையும் முன்னாள் கண்டு வந்தவனாதலின், சிலம்பு கொண்டு புறப்பட்ட கோவலன், நேரே, அவ்வணிகர்களிடமே சென்றிருக்க வேண்டும். மேலும், அவன் கொண்டு செல்வது, “காவலன் தேவிக்கு ஆவதோர்” சிறப்பு வாய்ந்த விலை மதிக்கவொண்ணாக் காலணி, ஆகவே அதை விற்கச் சென்றவன், வணிகர்களிலும், அரசர் குடும்பத்திற்காம் உயர்ந்த அணிகளை ஆக்கி அளிக்க வல்ல பெரு வணிகர்களிடமே சென்றிருக்க வேண்டும். ஆனால், கோவலன் அது செய்தானா என்றால், இல்லை. வணிக வீதியில் அடியிட்ட அளவே, எதிரில் பொற் கொல்லன் வரக் கண்டு, அரசர்க்குரிய அணிகலன்களை விலை மதிக்க வல்ல பெரிய பொற் கொல்லனாக இருக்க வேண்டும் எனத் தானே கருதிக் கொண்டு விட்டான். அவ்வளவே. வணிகர்களைக் காண வேண்டும்; தன் நிலை உணர்த்த வேண்டும் என்பதை மறந்தே போனான்; பொற்சிலம்பைப் பொற் கொல்லன் கையில் கொடுத்து, விலை மதிக்குமாறு கூறி விட்டான். மாநகர் காண, முன்னாள் சென்ற போது, இவனை அறிந்து வந்தானா கோவலன் என்றால், இல்லை. அறிந்து வந்திருந்தால், “உன்னால் இதற்கு விலை கூற இயலுமா?” “நீ விலை இடுதற்கு ஆதியோ?” என்று கேட்டிருக்க மாட்டான். மேலும், பொற் கொல்லனை, அவன் பணி புரியும் இடத்தில், இருந்து தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/94&oldid=1779849" இலிருந்து மீள்விக்கப்பட்டது