பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சுந்தர சண்முகனார்



என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்தில் வணிகர்கள் சிலர், அகல - நீள வாட்டமுள்ள துணியில் எழுதி விளம்பரப் படுத்தி விற்பனை செய்கின்றனர். துணியின் வாயிலாக விளம்பரப்படுத்தும் வழக்கு அந்த நாளிலும் இருந்ததாகத் தெரிகிறது. இப்பகுதியில் உள்ள மாலைச் சேரி என்பது நோக்கற்பாலது. மாலை = ஒழுங்கு. சேரி என்பது, ஒவ்வொரு பொருளும் விற்கும் ஒவ்வொரு பகுதியையும் குறிக்கும்.

இவ்வளவு சிறப்புடன் திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டது வேதனைக்கு உரியது. இதுகாறும் சோழரின் புகார் நகர வணிக வளம் இடம் பெற்றது. அடுத்து, பாண்டியரின் மதுரை நகரின் வணிக வளம் காணலாம.

ஊர் காண் காதை

மதுரை மாநகரின் புறஞ்சேரியிலே (புறநகர்ப் பகுதியில்) கண்ணகியைக் காக்குமாறு கவுந்தியிடம் ஒப்படைத்துவிட்டுக் கோவலன் மதுரையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். அவன் கண்ட வணிகப் பகுதிகள் இவண் வருமாறு:ஒன்பான் மணிகள் (நவரத்தினங்கள்) விற்கும் கடைத்தெருகொடி கட்டி விளம்பரம் செய்து பொன் விற்கப்படும் பகுதி - பருத்தி நூலாலும் பட்டு நூலாலும் பல் வகை மயிர்களாலும் நெய்யப்பட்ட பல்வேறு வகை ஆடைகள் விற்கும் பகுதி - மிளகுப் பொதியுடனும் நிறுக்கும் துலாக் கோலுடனும் ஒரிடத்தில் நில்லாது நேரம் பாராது கூலங்களைச் (தானிய வகைகளைச்) சுமந்து திரிந்து விற்கும் பகுதிகள் - இன்ன பிற வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகள் ஆகியவற்றையும் மற்றுமுள்ள நகர்ப் பகுதிகளை யும் கோவலன் சுற்றிப் பார்த்தான்: