பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சுந்தர சண்முகனார்


தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியலில் உள்ள பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு’ (25) என்று தொடங்கும் நூற்பாவின் உரையில், பேராசிரியர், "யாண்டு என்பது ஒத்தவாறு என்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறு யாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் (முதிரும்) பருவம் என்பது" என எழுதியுள்ளார்.

இளம்பூரணர், (களவியல் - 2) "ஆண்டு என்பது ஒத்த பருவத்தராதல். அது குழவிப் பருவம் கழித்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல்" என்று உரை எழுதியுள்ளார்.

இந்தக் காலத்தில் திருமண அகவை பெண்ணுக்குப் பதினெட்டின் கீழும் ஆணுக்கு இருபத்தொன்றின் கீழும் இருத்தலாகாது எனச் சட்டம் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகள் தமது குழந்தைத் திருமணத்தைப் பற்றிக் கூறுகையில், எனக்கு விளையாடுவதற்கு ஒரு சிறுமியைச் சேர்த்து வைத்தனர் என எண்ணினேன் - என்று கூறியதாக எதிலோ படித்த நினைவு உள்ளது. குழந்தைத் திருமணம் பார்ப்பனரிடையே கட்டாயமாக அன்று இருந்தது. அது மற்ற இனத்தாரையும் நாளடைவில் தொற்றிக் கொண்டது இப்போதோ, முப்பத்தைந்து அகவை நிறைந்த இளங் கிழவிகள் சிலர்க்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிதாயுள்ளது. அந்தோ, கொடியது மக்கள் குழு!

சிலப்பதிகார மணமக்களின் பெற்றோர்கள் மா பெருஞ் செல்வராதலின், யானையின்மேல் பெண்களை ஏற்றி நகரைச் சுற்றி வந்து திருமணச் செய்தியை அறிவிக்கும்படி ஏற்பாடு செய்தார்களாம்.

"யானை எருத்தத்து அணியிழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்"
(1:43, 44)