பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

129


சிலம்பு - முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் உள்ள "அகலுள் மங்கல அணி எழுந்தது" (46) என்னும் தொடருக்கு, ‘ஊரிலே மங்கல நாண் வலம் செய்தது” என்று பெரியோரால் உரை எழுதப்பட்டுள்ளது. மங்கல நாண் என்பது தாலி. எனவே, தாலி கட்டும் வழக்கம் அன்று இருந்தது எனலாம்.

சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த மற்றொரு கடுமையான மரபைச் சொல்லாமல் விடுவதற்கு இல்லை. அதுதான் திருடனுக்கு இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுப்பது. இந்தக் காலத்தில் கொலை செய்தவனுக்கே இறப்பு ஒறுப்பு தரப்படுகிறது. கொலை செய்த சிலர் வாணாள் ஒறுப்பு (ஆயுள் தண்டனை) பெறுவதோடு தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் கொலை செய்தவனுக்கு மட்டுமன்று கள்வனுக்கும் இந்த ஒறுப்பு தரப்பட்டது. கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வந்து தன் கணவனைக் கொன்றது தகாது என்று வழக்கு உரைத்த போது, கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று - செங்கோலே என்றான் பாண்டியன்,

"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என"
(20:54, 65)

என்பது பாடல் பகுதி. 'கள்வன் மனைவியும் காவலன் மனைவியும் கைம்பெண்டாட்டிகள்' என்பது ஒரு பழமொழி. காவலன் = அரசன். கைம்பெண்டாட்டி = கைம்பெண் . விதவை. அந்தக் காலத்தில் அரசர்கள் அடிக்கடிப் போரிட்டுக் கொண்டு இறந்து போவதால் அவர்களின் மனைவியர் கைம்பெண் ஆகின்றனர். அதேபோல், கள்வனுக்கு இறப்பு ஒறுப்பு தருவதால் அவன் மனைவியும் கைம்பெண் ஆகிறாள். இந்தப் பழமொழியின் விளக்கம் இது.