பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

சுந்தர சண்முகனார்



பாண்டியன் பெருமை

அடுத்த கட்டம் பாண்டியனைப் பற்றியது. பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் கோடித் தீர்ப்பு வழங்கிக் கோவலனைக் கொல்வித்ததனால், பாண்டியர் குலத்திற்கும் மதுரைக்கும் பின்னால் தாழ்வு நேர்ந்ததல்லவா? இந்தப் பின்னோட்டத்திற்கு முன்னோட்டமாகப் பாண்டியன் பெருமையும், மதுரையின் பெருமையும், கவுந்தி, கோவலன், பாணர்கள், மாங்காட்டு அந்தணன். மாடலன், மாதரி, வாயிலோன், மதுராபதி முதலியோரால் மிகவும் பாராட்டிப் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன. அப்பாராட்டுப் புகழுரைகள் முறையே ஒவ்வொன்றாய் வருமாறு:

கவுந்தி

கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டு நீங்கிக் கவுந்தியடிகள் இருந்த பள்ளியை அடைந்து தாங்கள் மதுரைக்குச் செல்வதாகக் - கவுந்தியடிகளிடம் கூறினர். யானும், தென் தமிழ் நாட்டில் உள்ள 'குற்றமற்ற மதுரைக்குச் செல்லும் விருப்பம் உடையே னாதலின் யானும் வருவேன் என்று கவுந்தி அறிவித்தார்:

“தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையே னாதலின்
போதுவல் யானும் போதுமின்”
(10:58-60)

இது பாடல் பகுதி, இளங்கோ தம் எழுத்தாணியின் வாயிலாக, ‘தீதுதீர் மதுரை’ என்று கவுந்தி சொல்லும்படி யாகச் செய்துள்ளார். ஆனால் மதுரையில் இவர்கட்குத் தீது காத்திருக்கிறது என்பதை இவர்கள் அப்போது அறிய மாட்டார்கள் - பின்பு இளங்கோவே அறிவார் அல்லவா?

மாங்காட்டு மறையவன்

மூவரும் வழியில் ஓர் இளமரக் காலில் தங்கியிருந்த போது, பாங்காட்டு மறையவன் என்பான், பின்வருமாறு