பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

சுந்தர சண்முகனார்


கோவலன் காதல்

கோவலனுக்குக் கண்ணகியிடம் உண்மையான காதல் இல்லை - அவன் அவளை உள்ளுணர்வுடன் - உள்ளத்தால் விரும்பவில்லை - என்றெல்லாம் ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியுள்ளனர். மனையறம் படுத்த காதையில் ‘காதல் கொழுநன்’ (11), ‘காதலின் சிறந்து’ (25), ‘தீராக் காதலின் திருமுகம் நோக்கி’ (36) என்றும், நாடுகா‘ண் காதையில் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க’ (230), என்றும், புறஞ்சேரியிறுத்த காதையில் ‘காதலி தன்னோடு கானகம் போந்ததற்கு’ (44) என்றும், அடைக்கலக் காதையில் ‘கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு’(139) என்றும், கொலைக்களக் காதையில் ‘கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ’ என்றும் அடிகள் பாடியிருப்பதன் உள்ளுறையாது? கோவலனுக்குக் கண்ணகி மீது தீராக் காதல் இருந்தது என்பது தானே கருத்தாகும்?

‘தீராக் காதல்’ என்றார் - தீராக் காதல் தீர்ந்தது எப்படி? இங்கேதான், மாதவியின் மயக்கும் ஆற்றலை, நூல் படிப்பவர்கள் பின்னர்க் கற்பனை செய்து பார்க்க ஆசிரியர் இடம் வைத்துள்ளார். ஒருவகை நிலையாமைக் கூறை உணர்த்துகிறது. இது. ஆனால், இதில் உண்மை இல்லாமலும் இல்லை. கோவலன், இறுதியில் மாதவியைப் பிரிந்து, பின்னர்த் தீராக் காதலுடன் கண்ணகிபால் வந்து சேர்ந்தான் அல்லவா? அகமுடையான் - பெண்டாட்டி சண்டை என்பர் - அந்தச் சண்டை நீடிக்காது என்றும் மக்கள் சொல்வர். அவ்வாறே கோவலனும் கண்ணகியும் கூடிக் கொண்டனர். எனவே, தீராக்காதல் என்பது பொருத்தமே.

கண்ணகிக்குப் புகழ்மாலை

கோவலன் கண்ணகியை நோக்கிப் பாராட்டுகிறான்:- என் அருமைக் கண்ணகியே! நீ திருமகள் ஆவாய்.