பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

சுந்தர சண்முகனார்


இங்கே பலருக்குமே ஒரு திருக்குறள் நினைவுக்கு வரலாம். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுபவள் பெய் என்று ஆணையிடின் மழை பெய்யும் - என்னும் கருத்துடைய

“தெய்வம் தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை” (55)

என்பது தான் அந்தக் குறள். இந்தக் காலத்தில் பகுத்தறிவாளர்கள் இந்தக் கருத்தை ஒத்துக் கொள்வதில்லை. தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுபவள், பெய் என்று சொன்னால் பெய்யக் கூடிய மழை ஒன்று இருந்தால் எப்படியோ - அப்படிப் போல் பயன் தரக்கூடியவள் - என்று புதிய பொருள் கூறுகின்றனர் அவர்கள். இந்தப் பொருளில், கணவனைத் தொழுபவள் மழையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளாள். அப்படி ஒரு பெண் இருந்தால் நல்லதேயாகும் - யாரும் மறுக்கவில்லை. ஆனால், பகுத்தறிவாளர்கள் கூறும் பொருளில் திருவள்ளுவர் இந்தக் குறளை இயற்றவில்லை. முதலில் தெரிவிக்கப்பட்டுள்ள பொருளில்தான் இந்தக் குறளை இயற்றியுள்ளார்.

பெண்கள் கணவரைத் தொழுதல் பற்றித் திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணி - கனக மாலையார் இலம்பகத்தில் தெரிவித்துள்ளார். பாடல்:

“சாமெனிற் சாத னோத
     றன்னவன் தணந்த காலைப்
பூமினும் புனைத லின்றிப்
     பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார்
      கணவற் கைதொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்

      சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்” (32)

என்பது பாடல்,