பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

23


4. திருப்பம்: கண்ணகியின் மாற்றமும் மதுரை அழிவும் தொடங்கிக் கண்ணகி சேரநாடு செல்லும் வரை திருப்பமாகும்.

5. முடிவு: தேவர்களும் கோவலனும் மேலேயிருந்து வந்து கண்ணகியை மேலுக்கு அழைத்துச் செல்லுதல் முதல் கண்ணகி வழிபாடு - வாழ்த்து - வரந்தரு காதை வரை முடிவாகும்.

இவற்றையே சுருக்கினால், (1) தொடக்கம் - புகார்க் காண்டம், (2) நடு - மதுரைக் காண்டம், (3) முடிவு - வஞ்சிக்காண்டம் என்னும் மூன்றுக்குள் அடக்கலாம்.

சுருங்கக்கூறின், காப்பியம் இன்பியலில் (comedy) தொடங்கித் துன்பியலில் (Tragedy) முடிந்தது எனலாம். துன்பியல் முடிவு வஞ்சிக் காண்டத்திற்குத் திறப்பு விழா செய்தது.

கூறியது கூறல்

சொன்னதையே திரும்பச் சொன்னால் ‘கூறியது கூறல்’ என்னும் குற்றமாகும் என்பர். “கூறியது கூறினும் குற்றம் இல்லை வேறொரு பொருளை விளைக்கு மாயின்” என்னும் நூற்பா கூறியது கூறலுக்கு மாற்றாகும். மன எழுச்சிகள் தோன்றும்போது அழுத்தம் திருத்தம் ஏற்படவும் கருத்தை வலியுறுத்தவும் கூறியதை மீண்டும் கூறுதல் ஒரு வகை நாடகக்கூறு என்னும் கருத்தை ‘The Art of Play Writing’ என்னும் நூலில் படித்த நினைவு இருக்கிறது. இந்தக் கூறு சிலப்பதிகாரத்தில் உள்ளது.

கானல் வரியில் இது இடம் பெற்றிருப்பது வேறொரு தலைப்பில் கூறப்பட்டுள்ளது. இனி, கண்ணகி இதைக் கையாண்டிருப்பதைக் காணலாம்.