பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

சுந்தர சண்முகனார்


அன்றே மாதவி வயந்த மாலை என்னும் தோழி வாயிலாகக் கோவலனை வருமாறு வேண்டி மடல் கொடுத் தனுப்பினாள். கோவலன் மடலை வாங்க மறுத்து மாதவிப் படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து, மீண்டும் திறக்க முடியாதபடி மூடு விழா செய்து விட்டான்.

அன்றிரவு கோவலனது பிரிவைப் பொறுக்க முடியாமல் நிலா முற்றத்தில் மாதவி சொல்லொணாத் துயருழந்தாள். அவள் மீட்டிய யாழும் பாடிய இசையும், மாதவிக்கு மறுப்பு தெரிவிப்பனபோல் திரிந்து மயங்கின.

கோவலனைக் காட்டு வழியில் கண்டு தந்து அழைத்து வரும்படிச் செய்யுமாறு கோசிகன் என்னும் அந்தணனிடம் மடல் எழுதிக் கொடுத்தனுப்பினாள். கோவலன் மாதவிக்கு எட்டாக் கனியாகி விட்டான்.

கோவலனிடம் குன்றாத அன்புடைய குலமகள் போலவே ஒழுகி வந்த மாதவி, கோவலனுக்குத் தன்னிடம் பிறந்த செதுக்காத சிற்பமாகிய மணிமேகலை என்னும் மகளையும் பிஞ்சிலே பழுத்த பழமாகத் துறவு பூணச்செய்து தானும் துறவு பூண்டு உண்மைத் துறவுக்குப் பெருமை அளித்தாள்.

மாதவியின் குறைபாடுகள்

மாதவி கோவலனின் அழகிலோ உயரிய பண்புகளிலோ மயங்கி அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. வாணிகம் செய்தே அவனை அடைந்தாள். அதாவது, அரசன் அளித்த ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னின் பெறுமானமுள்ள பசுமணி மாலையை அத்தொகையினை அளித்துப் பெறுபவரே தன்னை அடையலாம் என நடுக்கடைத் தெருவில் விலை பேசச் செய்ய, ஐயோ - பாவம் - அப்பாவி - காமுகனாகிய கோவலன் அத்தொகையளித்து மாலையை வாங்கிய பின்னரே மாதவியை அடைய முடிந்தது.