பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

சுந்தர சண்முகனார்


என்னும் பட்டினத்தாரின் பாடலின் படி, பரத்தையர் குலத்தில் பிறவாமல் நல்ல குடியிலேயே பிறந்தும், கைக்குக் கை மாறும் சில கடை மகளிர் இருப்பதுண்டு. இது எங்கோ சிலவேயாகும். நல்ல குடியில் பிறந்த பெண்களுள், ஒருவனை அவன் மனைவியினின்றும் பிரித்துத் தன்பால் ஈர்த்துக்கொண்டு, அவனுடன் இறுதிவரையும் கற்புடைய மனைவியாக ஒழுங்காக இல்லறம் நடத்தும் மகளிரும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்டு.

மாதவியின் நிலை இதனினும் வேறு. காசு பெற்று, உடலை விற்பவர் அல்லர் - உடலைச் சிறிது நேரம் இரவலாகத் தருகின்ற - சிறிது நேரம் வாடகைக்கு விடுகின்ற பரத்தையர் குலத்தினைச் சேர்ந்த சித்திராபதியின் மகளாகிய மாதவி, எப்படியோ தன்னிடம் வந்து அகப்பட்டுக்கொண்ட கோவலனை, அவன் மனைவியிடம் அனுப்பாவிடினும், பிள்ளை பெறும் அளவுக்குக் குடும்பம் நடத்திக் கற்புடைய மங்கையாகவே வாழ்ந்து வந்திருக்கிறாள். விளையாட்டு வினையாதலைப் போல விளையாட்டாகப் பாடிய கானல் வரிப் பாட்டினால் கோவலன் பிரிந்ததும், குலத்தொழிலின் படி வேறு எவரையும் நாடாமல், மீண்டும் அவனுடனேயே இருந்து குடும்பம் நடத்த எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் கை கூடவில்லை. வருந்தினாள் - வருந்தினாள் - வருந்திக் கொண்டேயிருந்தாள். கோவலன் இறந்த செய்தி கேட்டதும் கடுந் துறவியாகி விட்டாள். மழலை மகள் மணிமேகலையையும் அவ்வாறே ஆக்கிவிட்டாள். இதுதான் மாதவிக்கு உரிய பெருஞ்சிறப்பாகும்.

மாதவியின் குலம்

மாதவி பரத்தையர் குலத்தைச் சார்ந்தவள் அல்லள் எனச் சிலரும், அவள் பரத்தையர் குலத்தினளே என வேறு சிலரும் கூறுகின்றனர்.