பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

சுந்தர சண்முகனார்


கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைத்துப் பரவியமை - இன்ன பிற சேரன் சிறப்புகளாம்.

புகாரிலும் மதுரையிலும் நடந்தது போன்ற நிகழ்ச்சி எதுவும் வஞ்சியில் நிகழாமையால் வஞ்சியின் சிறப்பு போதிய அளவில் இடம் பெறவில்லை.

செங்குட்டுவன் பிறப்பு

செங்குட்டுவன் பிறப்பு பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை வயிற்றில் பிறந்தவன் என்பதற்கு, வாழ்த்துக் காதை - உரைப்பாட்டு மடை என்னும் தலைப்பில் உள்ள

"குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்குத் திக ழொளி
ஞாயிற்றுச் சோழன் மகள்
ஈன்ற மைந்தன் கொங்கர்
செங்களம் வேட்டுக் கங்கைப்
பேரியாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன்"


என்னும் பகுதி சான்று பகரும். சோழன் = மணக்கிள்ளி. சோழன் மகள்=நற்சோணை. இது அவர்களின் இரண்டாம் மகனாகிய இளங்கோவே எழுதியது.

ஆனால், கழக இலக்கியமாகிய பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்துப் பதிகத்தில்,

"குடவர் கோமான் நெடுஞ்
சேரலாதற்குச் சோழன் மணக்
கிள்ளி ஈன்றமகன் கடவுள்
பத்தினிக் கற்கோள் வேண்டிக்
... கடல் பிறக்கோட்டிய
செங்குட்டுவன்"