பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

359



என்றிருப்பது தவறு. இதில் கூறப்பட்டுள்ள உறவு முறை சரியில்லை. ஆணுக்கு ஆண் வயிற்றில் பிறந்த மகன் என்று பொருள் செய்யும்படி இப்பகுதி உள்ளது. 'சோழன் மணக் கிள்ளி ஈன்ற மகன்' என்று இல்லாமல், சோழன் மணக் கிள்ளி ஈன்ற மகள் வயிற்று மகன்... செங்குட்டுவன் என்று எழுதி இருக்க வேண்டும். ஏடு பெயர்த்து எழுதியவர்கள், 'ஈன்ற-மகன்' என்னும் இரு சொற்கட்கு இடையே இருந்த 'மகள் வயிற்று' என்னும் இரு சொற்களையும் கை தவறி விட்டுவிட்டிருக்கக் கூடும்.

செங்குட்டுவன் சமயம்

சிலப்பதிகாரத்தில் உள்ள சில அகச்சான்றுகளால் செங்குட்டுவன் சைவ சமயத்தவன் என்பது பெறப்படலாம். சில அகச் சான்றுகள் வருமாறு:

"நிலவுக் கதிர்முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு"
(26: 54, 57)


"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவ சேளாய்"
(26; 98-99)


"ஆணேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி

மாநிலம் விளக்கிய மன்னவன்"
(30: 141, 142)


"ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்கின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கின னாகி.."
(26, 62-67)