பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

93

 2. இயற்றிய உருக்களை இசைகொள்ளும்படியும் சுவை (இரசம்) கொள்ளும்படியும் புணர்த்துப் பாடவேண்டும்.

3. செந்துறை, வெண்டுறை ஆகிய இருவகைப் பாடலுக்கும் உரிய இயக்கம் நான்கும் அறிந்து, இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் ஆகியவற்றிற்கு ஏற்ப இசை கடைப்பிடித்து, இசை வேறுபாடுகளைக் குற்றமற அறிந்திருத்தல் வேண்டும்.

4. இயல் புலவன் (பாடல் எழுதிய ஆசிரியன்) நினைத்த கருத்து, ஆடல் ஆசிரியன் அறிவிக்கும் அவிநயம், இவற்றிற்கு ஏற்ற பாட்டு ஆகியவற்றை உணர்ந்து பாடல் வேண்டும் - முதலியன இசையாசிரியனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளாம்.

4. இயல் கவிஞன் இயல்பு

1. நான்கு எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு அறியும்படி முத்தமிழிலும் வல்லமை பெற்றிருத்தல் வேண்டும்.

2. வேத்தியல், பொதுவியல் என்னும் இருநாடக நூல் அறிவு பெற்றிருத்தல்.

3. பதினொரு பண் நீர்மை அறிந்து தாளம் பொருந்தப் பாடல் இயற்றுதல்.

4. வசையற்ற மொழிகளால் பாடல் இயற்றுதல் - முதலியன பாட்டு இயற்றுவோனுக்கு உரிய இயல்புகளாம்.

5. தண்ணுமைக்காரன் இயல்பு

1. எல்லா ஆடல்களும் பண்ணல் முதலிய பாடல் வகை களும் அறிதல்.

2. 16991 ஆதி இசைகளை அறிந்திருத்தல்.

3. வடவெழுத்து நீங்கி வந்த எழுத்துக்களாலே இசைத்துச் சேர்க்கப்பட்ட வாக்கியக் கூறுகளும் மூவகைத் தமிழும் அறிதல்.