18. சீதா கல்யாணம்
ராமனுக்கும் சீதைக்கும் அந்த ஒரு நாள் இரவு கழிவ்து ஒரு யுகம் கழிவது போலவே இருந்தது. பொழுது விடிந்ததும் பார்த்தால், மிதிலா நகரம், மாலைகளாலும், தோரணங்களாலும்,கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு அமராவதிப்பட்டணம் போலவே காட்சியளித்தது. -
தோரணம் நடுவாரும், துண் உறை பொதிவாரும், பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும், கார் அணி நெடு மாடம் கதிர்மணி அணிவாரும், ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும்;
ஆக, எங்கு பார்த்தாலும், எல்லோரும் நகரை அலங்கரிப்பதிலேயே முனைந்திருந்தார்கள். சீதா ராமரது மணத்தைக் காண வந்தவர்களின் தொகை கணக்கில் அடங்காது.
தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும், ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக் கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும், பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும்.
(சிவிகை - பல்லக்கு. ஊர்தி - வாகனம். கார்- கரிய ஆண் யானை. கரிணி - பெண் யானை. பண்டி -வண்டி)