பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்துரை

 

முனைவர் கோ. விசயவேணுகோபால், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.,

(முன்னாள்) பேராசிரியர் & தலைவர், கலை வரலாற்றுத்துறை,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

 

"சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல்" டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்கள் இப்போது "சீர்மிகு சிவகங்கைச் சீமை" எனும் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். பெரிய மறவர் சீமையின் வரலாற்றில் நாட்டஞ்செலுத்தி வந்தவர், இப்போது சின்னமறவர் சீமை வரலாற்றில் நாட்டஞ்செலுத்தி நல்லதொரு நூலை நமக்கு அளித்துள்ளார். மொத்தம் பதின்மூன்று இயல்கள் கொண்ட இந்நூலின் முதல் பதினொரு இயல்களில் சங்க காலந்தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான சிவகங்கைச் சீமையின் தோற்ற வளர்ச்சிகள் குறித்த வரலாறு தக்க முதன்மை, துணைமைச் சான்றாதாரங்களோடு விளக்கப்பட்டுள்ளது. 12 ஆவது இயல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிவகங்கைச் சீமையின் பங்கு பற்றி விளக்குகிறது. 13 ஆவது இயல் சிவகங்கை வரலாறு குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய விமர்சனமும் விளக்கமுமாக அமைந்துள்ளது.

சிவகங்கைச் சீமை பற்றிய அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கியதாகவும், நடுநிலையோடு எழுதப்பட்டதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. ஆசிரியர் தொகுத்துத் தந்துள்ள முதன்மை, துணைமை ஆதாரங்கள் அவர்தம் உழைப்பினை நமக்குப் புலப்படுத்துகின்றன. முதன்முதலாக ஆசிரியர் அரிதின் முயன்று தொகுத்தளித்துள்ள செப்பேடுகள் வரலாற்றாய்வாளர்கட்கும், சமூகவியல் ஆய்வாளர்கட்கும் கிடைத்த ஒரு புதையல் என்றே சொல்லலாம். ஆசிரியர் ஏற்கனவே சேதுபதிகளின் செப்பேடுகளை வெளியிட்டுப் புகழ்பெற்றவர். இப்போது சிவகங்கைச் செப்பேடுகளை வெளியிட்ட முதல் வரலாற்று ஆசிரியராகவும் சிறப்புப் பெறுகிறார்.

ΧΙΙΙ