பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


சிற்றிலக்கியங்களுடன் ஒப்பிடக் கூடிய சிறந்த படைப்பாகும். இந்த நூலின் தொடக்கப் பகுதியில் மன்னர் முத்து வடுகநாதரை அவர் வாழ்த்திப் பாடிய பகுதி:

"வயனிருவர் பரவுமுத்துவடுக நாதேந்த துரை
     மார்க்கண்டன் போலிருக்க கூவாய் குயிலே
உயர்குழந்தைத் துரையரசு அரசுகள் குமார வர்க்கம்
     உகந்து பெற வசந்தரவே கூவாய்குயிலே
தயவுள்ள மெஞ்ஞான துரை தர்ம சமஸ்தானாபதி
    தழைத்தோங்கி வளரவே கூவாய் குயிலே
நயமிகு கண்ணுடையவட்கு இலுப்பைக்குடியூர் கொடுத்த
    ராஜசிங்க மிவனென்று கூவாய்குயிலே!"

இந்தப் புலவரது இன்னொரு படைப்பு வசன சம்பிரதாயக் கதை என்ற வசனக்காவியம். தமிழ் மொழியில் உரைநடையில் இயற்றப்பட்ட முதல் நூல் என்ற பெருமை பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தமிழில் உரைநடை நூல், என்ற வகையே இல்லாமல் இருந்தது. எல்லாம் செய்யுளில்தான் அமைந்து இருந்தன. இயற்றப்பட்டன. புலவர்கள் தங்களது விருப்பத்தை வள்ளல்களுக்கு அறிவிக்கும் மடல்கள் கூட, செய்யுளில் இருந்தன. அந்த வகைச் செய்யுள் சீட்டுக் கவி எனப்பட்டது. ஒருவர். மற்றொருவர்க்குச் சொல்லும் செய்திகள் கூட செய்யுள் அமைப்பில்தான். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம் இந்தக் கடிதங்கள் மடல் அல்லது நிருபச் செய்யுட்கள் எனப்பட்டன. நமது சிவகங்கைச் சீமைப் புலவர்தான் இவைகளுக்கு மாற்றமான புதுமையைப் படைத்தார். வசன நடை அல்லது உரைநடை என்ற இன்றைய இயற்றமிழைக் கண்டுபிடித்தார். இந்த உரைநடையில் வந்த முதல் நூல் வீரமாமுனிவரது "பரமார்த்த குருக்கள் கதை” என்ற படைப்பு என்று எண்ணப்படுகிறது. ஆனால் அதற்கும் முந்தைய முதல் படைப்பு "வசன சம்பிரதாயக் கதை"யாகும். இந்த நூல் முதன் முதலில் பர்மா நாட்டு ரங்கூனில் வெளியிடப்பட்டதால் தமிழ் நாட்டில் அதனைப் பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலர்.

ஒரு நாள் மகா சிவராத்திரி இரவு. சிவகங்கை மன்னரும் மக்களும் இரவு முழுவதும் விழித்து இருந்து ஒரு கதையினைக் கேட்கின்றனர். அந்தக் கதையை நமது புலவர் சொல்லுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்ப் பெயர், மக்கள் பெயர்களை இணைத்து தல புராணங்களின் கதைக் கருக்களை பெயர்களை ஆங்காங்கே புகுத்தி ஆர்வத்துடன் கேட்கும் முறையில் அவைகளைத் தொகுத்துச் சொல்கிறார். அந்தக் கதையின் இறுதிப் பகுதி:

".... இந்த மட்டும் ராஜ ரீ கர்த்தாக்கள் கிருபையினாலே மேகனன் சேர்வைக்காரன் வகை, இவ்விடத்துக்கு வந்து சம்பூரணமாய் வருஷக்