பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதுமையார் இலம்பகம்113



மணம் சிறப்பாக நடந்தது. அவன்பக்கம் சுற்றம் இல்லையே என்று பெண் வீட்டாருக்கு வருத்தம் தான்; இருந்தாலும் அதை அவர்கள் பெரிது படுத்தவில்லை.

இரவுகளில் ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதைகளில் ஒரு சிலவற்றைப் படித்து இன்பமாகப் பொழுது போக்கினர். அவளும் விழித்துக் கொண்டு அவனோடு அக்கதைகளை ரசித்தாள். பகலில் பொழுது போவது சிரமமாக இருந்தது. புதுப்புதுச் சமையல், அவியல், துவையல் இந்தக் கலவைகள் நாவுக்குச் சுவை பயந்தன; மாலைகளில் நாடகம் நயந்தும், பாடல்களைக் கேட்டும் இனிமையாகப் பொழுது போக்கினர். எதுவும் இல்லையென்றால் அவர்கள் தம் இனிய நினைவுகள் ஒன்று இரண்டு பேசி மகிழ்ந்தனர். “உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

“சொன்னால்தானே தெரியும்”

“நான் சின்ன வயதில் முல்லைச் செடி ஒன்று நட்டு வைத்தேன்”

“அது முறுவல் காட்டி இருக்கும்”

“அது எப்படி உமக்குத் தெரியும்?”

“அதைப் பார்க்கத்தானே நீ சென்றாய்”

“அப்பொழுதுதான் அந்த நாகம் கடித்தது; துடிதுடித்து விட்டேன்; முடிந்தது என் வாழ்க்கை என்று மயங்கி விழுந்து விட்டேன்.”

“நானும் அப்படித்தான் மயங்கி விழுந்து விட்டேன்; மறுபடியும் கதையைத் தொடர்ந்து சொல்.”

“அந்த முல்லை வயதுக்கு வந்தது”

“உனக்கு என்ன பைத்தியமா?”

“பூப்பு அடைந்தது; அதைத்தான் அப்படிச் சொன்னேன்”