பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116சீவக சிந்தாமணி



விட்டான்; இந்தக் கதை எல்லாம் உன் அண்ணனுக்குச் சொல்லி இருக்கின்றேன்; சீவகனே இப்படிச் சில்லரை விஷயங்களில் ஈடுபடுகிறான் என்றால் நான் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். சீவகனுக்கு ஒரு அநங்கமாலை; எனக்கு உங்கள் ஊர்த் தேசிகப் பாவை” என்றான்.

“நேசிப்பதில் தவறு இல்லை. அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை” என்று அவள் அதைத் தொடரவில்லை.

ஊடலுக்கு இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தினாள்; அதனால் அவன் கூடலுக்கு அது தடையாக நிற்கவில்லை.

என்னதான் ஒரு திரைப்படம் பிரமாதம் என்றாலும் அதை எப்படித் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அவனால் அங்கு நீடித்து இருக்க முடியவில்லை. அவன் பயணம் அங்கிருந்து தொடர்ந்தது. அவன் வழக்கம்போல் மிகவும் கொடியவனாகவே நடந்து கொண்டான்; அவளிடத்தில் ‘போய் வருகிறேன்’ என்று ஒரு சொல்கூடச் சொல்லவில்லை.

விடியற் பொழுது; அது தோள் தோய்ந்த காதலனை வாள்போல் பிரித்துவிட்டது.

தேடித் தேடிப் பார்த்தாள்; தேசிகப்பாவையின் வீட்டுக்கும் ஆள் அனுப்பிப் பார்த்தாள். “அவர் வந்துபோய் விட்டார்” என்று அவள் சொல்லி விட்டாள்.

இந்தச் செய்தியை அவள் தன் தாய்க்கு அறத்தொடு நின்றாள்; தாய்க்குச் சொல்ல அவள் தன் கணவனுக்கும் மகனுக்கும் சொல்லக் காணவில்லை என்று அனைவரும் கண் கலங்கினர்.

அவள் தாய் “மகளே! இந்தக் கடல் ஏன் உப்புக் கரிக்கிறது தெரியுமா?” என்று கேட்டாள்.