பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122சீவக சிந்தாமணி


காலம் சிறிது காத்திருந்தான். மிகப் பொறுமையாக நடந்து கொண்டான்; சொல்லாமல், வீட்டை விட்டு வெளியேறினான்.

சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்; ஊரைக் கூட்டிப் பஞ்சாயத்து வைத்திருப்பார்கள்.

“மாப்பிள்ளை ! உனக்கு என்ன குறை வச்சேன்; பெண்ணைக் கண்கலங்காமல் காப்பாற்றுவீர்கள் என்று தானே கட்டிக் கொடுத்தேன்; வேண்டுமென்றால் இன்னும் இரண்டு லட்சம் பொன் கேளுங்கள் தருகிறேன்” என்று அவர் பண நோக்கில் பேசித்தான் வாணிபன் என்பதைக் காட்டிக் கொள்வார்.

தாயோ என்றால் “என்னமோ, தெரியலை; இவள் எப்படி நடந்து கொண்டாளோ? மாப்பிள்ளை மனம் கோணும்படி நடந்து கொண்டாளோ” என்று வேறுவிதமாகக் கணக்குப் போட ஆரம்பித்து இருப்பாள்.

அவளோ என்றால் கயிற்றை உத்தரத்தில் மாட்டி வைத்துவிட்டுப் “பிரிந்தால் உயிர் தரியேன்” என்று பேச வாய்ப்பு உள்ளது; “நீங்கள் இங்கே திரும்பி வரும்போது என் எலும்பைத் தான் பார்ப்பீர்கள்; அது கூடக் கொளுத்தி விட்டு இருப்பார்கள்” என்று மிரட்டி இருப்பாள்.

அதனால்தான் இவன் சொல்லாமல் வெளியேறினான். அவர்களும் நாள் செல்லச்செல்ல அடங்கி அமைந்தார்கள்.

“மாலைவாரார் ஆயினும் காலை காண்குவம்; வருவர்” என்று அவள் மாதவியைப் போலத் தினம் தினம் சொல்லிக் கொண்டு நாட்களைக் கடத்தினாள்.

தக்க நாடு இன்னும் முடியவில்லை; வழிப்பயணத்தில் அவனுக்குத் தக்க துணைவன் ஒருவன் கிடைத்தான்.