பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132சீவக சிந்தாமணி



வந்தான் என்று கேட்காமல் இருக்கமாட்டார்கள்; வெள்ளையும், சள்ளையுமாக இருக்கிறான். ஒசி சாப்பாடு; என்று ஏசாமல் இருக்கமாட்டார்கள்” என்றான்.

“இந்த ஊரில் என்ன விசேஷம்?” என்றான் சீவகன்.

“பெண்கள் கொஞ்சம் அழகாக இருப்பார்கள்”

“கொஞ்சம் தானா?”

“மற்றவர்களைவிடக் கூடுதலாக இருப்பார்கள் என்று சொன்னேன்” என்றான்.

“எதை வைத்து இப்படிச் சொல்லுகிறாய்? என்று கேட்டான்.

“அதனால்தான் இங்கே வந்து பெண் எடுத்து இருக்கிறேன்” என்றான்.

அதிலே அவனுக்கு ஒரு மனநிறைவு இருப்பது உணர்ந்தான்.

அழகிய மனைவி வாய்த்தாலே அது ஒரு பெருமைக்கு உரியது என்பதை அவன் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டான்; இவன் தொட்ட இடமெல்லாம் அழகின் உறைவிடம் என்று எண்ணும்போது இவனும் பெருமை அடைந்தான்; இவனுக்குள்ளேயே ஒரு ஆய்வை மேற்கொண்டான்; வீணை வித்தகி தத்தை; பண்பின் உறைவிடம் குணமாலை; புதுமை தந்தவள் பதுமை; செல்வமகள் கேமசரி இவர்களில் யார் பேரழகி என்று ஆராய்ந்து பார்த்தான்; ஆனால் முடிவு செய்ய இயலவில்லை. அவன் எப்படித் தன் மனைவி அழகி என்பதை முடிவு செய்தான் என்பதை அறிய ஆவல் கொண்டான்.

“எதை வைத்து உன் மனைவி அழகி என்று முடிவு செய்தாய்?” என்று கேட்டான்.