பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமலையார் இலம்பகம்147



அவன் தன் மாமன் மகளை மணக்கவேண்டும் என்று கூறினாள். உறவுக்காக அல்ல; அவள் அழகுக்காகவும் அல்ல; வலிமைக்காக தன் தமையன் கோவிந்தன் ஒரு சிற்றரசன்; அவனிடம் தக்க படைத் துணை இல்லா விட்டாலும் அது தொழில் தொடங்குவதற்கு உதவும் மூலதனம் என்பதை அறிந்து இவ்வாறு கூறினாள்.

அடுத்தது ஒற்றரைக் கொண்டு உற்றநிலை அறிய வேண்டும் என்று கூறினாள். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வஞ்சனையைச் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் என்று உரைத்தாள்.

அருள் நெறி கண்ட அவள் பொருள் நெறி அறிந்து பேசினாள்; பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லை என்பதை வற்புறுத்திக் கூறினாள். “பொருள்தான் பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும். பொன் இருந்தால் பொருபடை திரட்டலாம்; படை இருந்தால் பகையை வெல்லலாம்; பகை வென்றால் எல்லா நன்மையும் அடையலாம்; இடமும் காலமும் ஆராய்ந்து தக்க துணையோடு சென்று கட்டியங்காரனை வீழ்த்துக” என்று ஆணையிட்டாள்.

பிறந்த மண்ணைக் காணச் சிறந்த தன் தோழர்களோடு விரைந்தான். தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கண்டு அவர்கள் துயர் தீர்த்தற்கு இராசமாபுரம் ஏகினான்.

தனக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் இல்லமாக விளங்கிய தவப்பள்ளியை விட்டு விசயை தன் பிறந்த வீடு நோக்கிச் சென்றாள்.

அவன் தன் அன்னையின் அரிய செயலை நினைத்துப் பார்த்தான்; கணவனை இழந்த கைம்பெண்கள் நடந்து வந்த பாதையை அவள் பின்பற்றவில்லை. அறுத்து விட்டு அமங்கலமாக வாழ்வில் பொலிவிழந்து மேலும்