பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்மகள் இலம்பகம்173



ஆற்றங்கரையில் மணலில் வீடுகட்டி விளையாடிய நாட்களில் இரண்டு வடிவங்களை மணலில் செய்து வைத்தாள். ஆற்றின் அலை ஒரு வடிவைக் கலைத்து விட்டது. அங்கேயே உட்கார்ந்து கொண்டு அழுது ஒலமிட்டாள்.

“ஏன் அழுகிறாய்?”

“மாமன் அவனைத் தண்ணிர் அடித்துக் கொண்டு போய் விட்டது” என்று கண்ணிர் விட்டிருக்கிறாள்.

தன் தோழிப்பெண்களுடன் கூடல் இழைத்தல் என்ற விளையாட்டை விளையாடிய போது எல்லாம் “அவனை அடைய முடியுமா” என்று கூடல் இழைத்து விளையாடி இருந்தாள்.

தான் கேட்ட கதைகளில் எல்லாம் அது வீரப் போர் என்றால் அதில் அவனையே வைத்துக் காணுவாள்; அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று நம்பிக்கை கொள்வாள்; அவன் வெற்றி பெற வேண்டும் என்று கதை முடியும் வரை காது கொடுத்துக் கேட்பாள்.

தத்தையைச் சீவகன் யாழில் வென்ற செய்தி கேட்ட போது அதே போலத் தன்னை வெல்லவும் தன் மாமன் மகன் வருவான் என்று கனவு கண்டவள்; அப்பொழுது அவன்தான் சீவகன் என்பது அவளுக்குத் தெரியாது.

மாமி வந்ததும் சிவகாமி சரிதத்தை அவள் வாயில் கேட்டிருக்கிறாள். அந்தக் கதையில் வரும் சிதம்பரம் அவன் தான் என்று எண்ணிக் கற்பனையில் ஆழ்வாள். சீவகனைப் பற்றி விசயமாதேவி பேசும் போது எல்லாம் அவள் பதுமையாகி இருக்கிறாள். அவனை அடைய வேண்டும் என்பதில் அவள் கொண்ட ஆசையைக் கொள்ளை ஆசை என்றுதான் கூறவேண்டி இருந்தது.