பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி இலம்பகம்187



தன் வாழ்வுக்கு உறுதுணையாக இருந்த தோழர்களின் நட்பினை மதித்தான்; நட்பு அதற்காகச் செய்யப்படுகின்ற தியாகங்கள் இவற்றைப் போற்றினான்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி இந்த உலகத்தை வாழ வைக்கும் உழவர்களையும், தொழிலாளர்களையும், போர்க்களத்தில் குருதி சிந்திப் போராடும் வீரர்களையும், நன்மைகள் நிலைக்க அறம் போதித்த ஆசான்களையும், அழகும் இனிமையும் சேர்க்கும் இசை ஆடற் கலைஞர்களையும், செந்தமிழ்க் கவிதைகளைப் புனைந்து இவ்வுலகத்தைச் சீர் பெறச் செய்யும் கவிஞர்களையும் மதித்தான்.

தன் இனிய மனைவியரைப் பற்றி நினைக்கும்போது அவர்கள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத்தந்த ஆசான்கள் என்று போற்றினான்.

“பெண்மை வாழ்க” என்று வாழ்த்தினான்.

ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கும் பெண் பின்னால் இருக்கிறாள். அவள் துணை என்பதைத் தன் தாய் விசயமாதேவியைக் கொண்டும், மனைவி காந்தருவதத்தையைக் கொண்டும் உணர்ந்தான்.

பருவ மாறுதல்களுக்கு ஏற்ப அவன் பார்வையும் மாறியது.

காமனும் ரதியுமாக வாழ்ந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டான்.

தன் மனைவியர் இப்பொழுது சிறுவர்களின் அன்னையர்கள் என்று பார்க்கும்போது அவர்கள் தாய்மை கண்முன் நின்றது. அவர்கள் முன்னிலும் பெருமை உடையவர்கள் என்பதை உணர்ந்தான். அழகால் தன்னைக் கவர்ந்தவர்கள் தாய்மை என்ற தியாகத்தால் உயர்ந்திருப்பதை அறிந்தான்.