பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28சீவக சிந்தாமணி



அழைப்பார்கள். எனக்கு வாய்த்த மனைவி மகா குணவதியாவாள்; நான் கிழித்த கோட்டை அவள் தாண்டியது இல்லை; பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்பார்கள்; அதற்கு அவள் இலக்கணமாக விளங்குவாள். பையன் பிறப்பான் என்று தான் எதிர்பார்த்தேன். பெண் பிறந்து விட்டாள், பையன் பிறந்திருந்தால் அவன் இந்தச் சொத்துகளுக்கெல்லாம் வாரிசாக வந்திருப்பான். பெண் என்றதும் என் மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்; திருமகளே எங்கள் வீட்டில் குடி பெயர்ந்ததுபோல இருந்தது. அவள் பிறந்ததும் எங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளே வந்தன. இன்றைக்கு இதே ஊரில் பெரும் புள்ளியாக நான் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மகள்தான். அவள் பிறந்த அதிருஷ்டம்; சிரித்த அவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனாலே தொட்ட இடம் எல்லாம் பொன்னாக விளைந்தது. இரு நூறு பசுக்கள் என் பாட்டனார் வைத்திருந்தார். என் தந்தை இரண்டாயிரமாகப் பெருக்கினார்; இப்பொழுது என்னிடம் இருபதினாயிரம் பசுக்கள் உள்ளன. மாடு தான் செல்வம். நிலம் நீர் இவற்றில் விளையும் பயிர்கள் ஒரு நாட்டின் அடிப்படைச் செல்வம். மாடுகள் அதற்கு அடுத்ததாகக் கூறலாம். பொன்னும் மணியும் இல்லாமல் இருந்தாலும் உயிர் வாழ்ந்து விடலாம். பாலும் சோறும் இல்லாமல் இருந்தால் யாரும் வாழ முடியாது.”

“இவ்வளவு செல்வம் இருக்கிறது. இந்த ஊரிலேயே நான்தான் இடையர்களின் தலைவன். என் ஒரே மகளைத் தக்கவனுக்கு மணம் முடித்துத் தர விரும்புகிறேன்.”

“என் மகளைப் பற்றிச் சொன்னால்தான் உங்களுக்குத் தெரியும். வெண்ணெய் போன்று இனியள்; பால் போல் தீஞ்சொல்லினள், வெண்ணெய் உருக்கிய பசு நெய்போல் தளதளத்த மேனியள். கரும்பு வில் பார்த்திருக்கிறாயா? அதைப் பார்க்கவே வேண்டியதில்லை;