பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவிந்தையார் இலம்பகம்31



“பசுக்களைக் கொண்டு வரும் வீரன் யாராக இருந்தாலும் ஒன்று தானே! அவள் வேறு எப்படி எதிர் பார்க்கமுடியும்? அவள் அப்பா சொற்படி கேட்டு நடக்கும் அடக்கமான பெண் தானே ! இதற்குமேல் உங்கள் விருப்பம்” என்றான்.

அவர் அவசரப்படவில்லை; மனைவி கோதாவரியைக் கருத்துக் கேட்டார்.

“அவளைக் கேளுங்கள்” என்று கை காட்டிவிட்டாள்.

“அம்மா! நீ என்ன சொல்கிறாய்?” தந்தையின் வினா இது.

“நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றாள் மணப்பெண்.

“சிறுசுகள் நாம் எவ்வளவு அடக்கிவைத்தாலும் பெரிசுகளின் கட்டுதிட்டங்களுக்கு எங்கே கட்டுப்படுகிறார்கள்.”

“பிடித்திருக்கிறதா?”

“நாங்கள் ஏற்கனவே பலமுறை சந்தித்து இருக்கிறோம். காதலித்தும் இருக்கிறோம் என்று சேர்த்துச் சொல்லச் சொல்கிறீரா அப்பா”.

“வேண்டாம்”.

மணம் நிச்சயிக்கப்பட்டது. பதுமுகன் மறுப்புச் சொல்லவில்லை; நண்பன் விரும்பியபடி நல்ல மாப்பிள்ளையாக நடந்துகொண்டான்.

மணச்சடங்கு முடிந்தது; இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

“ஏற்கனவே என்னை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான்.

“இல்லை; பொய் சொன்னேன். எனக்கு உங்களைப் பிடித்திருந்தது; அதனால் அப்படிச் சொன்னேன்” என்றாள். அவள் சுறுசுறுப்பை அறிய முடிந்தது அவனால்.