பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32சீவக சிந்தாமணி



“நான் பார்த்திருக்கிறேன்; அதனால்தான் ஒப்புக் கொண்டேன்” என்றான் அவன். “நாங்களும் அப்படித் தான். பசுவைப் பார்த்துத்தான் விலை பேசுவோம்; மடியையும் தொட்டுப் பார்ப்போம்” என்று நகைத்தாள்.

ஏழு பொற்பாவைகளையும் இந்த நற்பாவைக்குச் சீதனமாகத் தந்தான். ஈராயிரம் பசுக்களை அவனுக்கு உரிமையாக்கினான். அவன் கோன் ஆகமுடியாவிட்டாலும் கோனார் ஆகும் சிறப்பினைப் பெற்றான்.

“என்னை உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா” என்று கேட்டாள். “இதோ என் கையில் உன்னைப் பிடித்து இருக்கிறேன்” என்று கூறினான். சிரிப்பு அலைகள் எழுந்தன.


3. காந்தருவ தத்தை இலம்பகம்

கந்துக்கடன் இராசமாபுரத்தில் செல்வச் சிறப்புமிக்க பெரு வணிகனாக இருந்தான். அவனுக்கு நிகராக மற்றோர் வணிகன் சீதத்தன் என்பவன் திரை கடல் ஒடித் திரவியம் தேடுவதில் நாட்டம் கொண்டான். கடல் கடந்து சென்று பல புதிய தீவுகளுக்கு இராசமாபுரத்து விளை பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அவனோடு படகோட்டிகளும், தொழில் செய் கம்மியரும், நெருங்கிய உறவினரும் சேர்ந்து செல்வர்.

பதுமை நிகர் அவன் மனைவி பதுமை பேரழகுடையவள். ஆனால் மகப்பேறு இல்லாத குறை அவர்களை வாட்டியது. அந்தத் துன்பத்தையும் மறக்க அவன் அவ்வப்போது வெளி ஊர்கள் செல்வதில் மனநிறைவு கண்டான். ஆட்களையும் உறவினர்களையும் உடன் வர வழக்கம் போல் அழைத்தான். அவர்கள் உள்ளது போதும்