பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ளிக் கோட்டை எனும் ஊர்ப்பெயரை-நீங்கள்
        காதாலே நிச்சயம் கேட்டிருப்பீர்.
வெள்ளைக் காரர்அந்த ஊரினிலே-வந்து
        வியாபாரம் செய்திடக் காலைவைத்தார்.


பாய்மரக் கப்பலில் ஏறிவந்தார்-அவர்
        பல்லா யிரம்மைல் தாண்டிவந்தார்.
ஆயிரம் ஆயிரம் குதிரைகளை- இங்கே
        அதிகப் பணத்திற்கு விற்றுவந்தார்.


குதிரைகள் விற்பதும், வாசனைப் பொருள்களைக்
        கொள்முதல் செய்வதும் அவர்தொழிலாம்.
அதிகமாய்த் தொழிலும் நடந்திடவே-பல
        அந்நிய ரும் இங்கே வந்தனராம்.


அப்படி இந்தியா வந்தவரே-இந்த
        ஆங்கி லேயர்எனும் வெள்ளையராம்.
கப்பலில் ஏறியே வந்தவரும்-ஒரு
        கம்பெனி தன்னை அமைத்தனராம்.