பக்கம்:சுயம்வரம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சுயம்வரம்

"அதற்கும் உன்னை அவ்வளவு லேசில் விடமாட்டான் அவன்!" யாரோ ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தன் மனைவியை விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டானாமே, அந்த மாதிரி உன்னையும் கொன்றாலும் கொன்றுவிடுவான் அவன்!"

"அதெல்லாம் என்னிடம் நடக்காது!"

"ஏன் நடக்காது? பொறுத்துப் பார், தெரியும்!"

"இனியாவது, நான் பொறுப்பதாவது? சாயந்திரம் வரட்டும். சொல்கிறேன்!" என்று 'கையில் சிலம்பில்லாத கண்ணகி' போல எழுந்தாள் மதனா.

"ஐயையோ! 'சொல்லமாட்டேன்' என்று சொல்லிக் கொண்டே நான் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லித் தொலைத்து விட்டேன்போல் இருக்கிறதே? என்னடி செய்வேன், அவன் என்னைச் சும்மா விடமாட்டானே!" என்று 'கண்ணில் நீரில்லாத நீலி'யாகக் கையைப் பிசைந்தாள் அருணா.

"பயப்படாதே நீ சொன்னதாக நான் அவர்ர்ர்ரிடம் எதையும் சொல்லமாட்டேன்!" என்றாள் அவள்.

"அதாண்டியம்மா வேணும் எனக்கு, அதாண்டியம்மா வேணும்!" என்றாள் இவள்.

அதற்குள் 'டாண், டாண்' என்று சாப்பாட்டு மணி அடிக்கும் சத்தம் அவர்கள் காதில் விழவே, "போ, போ! போய்ப் பல்லை மட்டுமாவது தேய்த்துக்கொண்டு வந்து விடு!" என்று மதனாவைக் குளிக்கும் அறைக்கு அனுப்பி விட்டுக் 'கிக்கிக்கிக்கி' என்று ஒரு 'வில்லிச் சிரிப்பு'ச் சிரித்தாள் அருணா.

அவள் வில்லனா என்ன, 'கக்கக்கக்கா' என்று தியேட்டர் அதிரச் சிரிக்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/39&oldid=1384952" இலிருந்து மீள்விக்கப்பட்டது